Sunday 11 December, 2011

காத்தீ சுத்தலாம் வாங்க – திருக்கார்த்திகை தீப சிறப்பு பதிவு!



காட்டுபூச்சி தன் ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவனது தங்கை சாந்தியும் அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். அது ஒரு மாலைநேரம், பள்ளியில் மணி அடித்தவுடன் வழக்கம்போல மாணவர்கள் ஹே!! என சத்தமிட்டுகொண்டு பள்ளியை விட்டு ஓடினர். காட்டுபூச்சியின் வீடு பள்ளியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்தது, குடும்பத் தொழில் விவசாயம் என்பதால் தங்களுடைய நிலத்திலே வீடுகட்டி வாழ்ந்துவந்தது அவனது குடும்பம். காட்டுபூச்சி தன் தங்கைக்காக பள்ளி வாயிலில் காத்திருந்தான். தங்கையை பள்ளிக்கு அழைத்து போவது, மீண்டும் வீட்டிற்கு அழைத்து போவது அவனது கடமைகளுள் ஒன்று. சாந்தி வந்தாள், இருவரும் வீட்டைநோக்கி நடையைகட்டினர்.

“சாந்தி இன்னைக்கி பனம்பூ பொருக்கனும்” என்றான். “எதுக்கு அண்ணா?” வினவினாள் சாந்தி. “காத்தி செய்யனும்ல” என்றான். “அதுக்கு இன்னும் பத்துநாள் இருக்கே” என்றாள். “ஞாபகம் இல்லையா?, போன தடவை நம்ம காத்தி செய்யும்போது மழை பெஞ்சி கெடுத்தது” என்றான். காத்தி செய்ய தேவையான இடுபொருட்களை சேகரிக்க தொடங்கினர். இருவரும் வழியில் இருந்த பனைமரங்களின் கீழே கிடக்கும் காய்ந்த பனம்பூக்களை, பொருக்கி புத்தக பைக்குள் போட்டுக்கொண்டனர். வீட்டிற்கு வந்தவுடன் பனம்பூக்களை சிறிய துண்டுகளாக உடைத்து உர சாக்கு ஒன்றில் பரப்பி, வீட்டின் வாசலில் இருந்த களத்தில் நன்கு வெயில் படும் இடத்தில் வைத்தான் காட்டுபூச்சி. காற்றில் பறக்காமல் இருக்க சாக்கின் நான்கு மூலைகளிலும் சிறிய கற்களை வைத்தான்.

காத்தி தயாரிப்பில் கரி முக்கிய மூலப்பொருள் ஆகையால் அம்மாவிடம் குறைந்தது மூன்று நாளைய அடுப்புக்கரியாவது வேண்டும் என கண்டிப்பாக சொல்லிவிட்டான். அம்மா சமைத்து முடித்தவுடன் அடுப்பில் உள்ள கங்கில் தண்ணீர் தெளித்து கரியாக்கவேண்டும். அம்மாவுக்கு அது ஒரு பெரிய வேலையில்லை ஆனால் அவளுக்கு தினமும் சாமான்களை விளக்க சாம்பல் தேவைப்படும். எனவே இரவு சமையலில் சாம்பலையும், காலை சமையலில் கரியையும் உற்பத்தி செய்தாள்.

இதற்கிடையில் காத்தி தயாரிப்பு முறை, என்னென்ன சேர்த்தால் பொறி அதிகமாக பறக்கும் போன்றவைதான் பள்ளி மாணவர்களிடையே முக்கிய விவாத பொருளாக இருந்தது. அதில் சிலர் தங்களை காத்தி தயாரிப்பில் கைதேர்ந்தவர்களா காட்டிகொள்வர். இன்னும் சிலர் தங்களுடைய காத்தி தயாரிப்பு சூத்திரத்தை சிதம்பர ரகசியம்போல் பாதுகாத்தனர். இப்படியாக நாட்கள் சென்றன. காத்தி தயாரிப்பு குறித்து காட்டுபூச்சி தன் சித்தப்பாவிடம் ஆலோசனை கேட்டதில், அவர் பொறிப்பூண்டு( இட்லி அளவில் குத்தாக வளரும் புல் உயரமாக வளராது) என்ற ஒரு வகை புல்லை சேர்க்க சொல்லியிருந்தார். அந்த பொறிப்பூண்டையும் சேகரித்து வீட்டில் வைத்திருந்தான். முன்னதாக நெல் உமி, வரகு உமி ஆகியவற்றையும் சேகரித்து வைத்திருந்தான். அனைத்து மூலப்பொருட்களும் கிடைத்துவிட்டன. இவை அனைத்தையும் வெய்யிலில் நன்கு உலர்த்தி வைக்குமாறு அம்மாவை கேட்டுகொண்டான்.

மேலும் சில நாட்கள் சென்றன. அன்று ஞாயிற்றுக்கிழமை இன்னும் இரண்டு நாட்களில் கார்த்திகை தீபம் எனவே காத்தி தயாரிப்பை இன்றே செய்வதென்ற முடிவுக்கு வந்தான் காட்டுபூச்சி. சாந்தியிடம் சிறிய துண்டுகளாக இருக்கும் பனம்பூவை மேலும் சிறியதாக்க சொன்னான், பொறிப்பூண்டை சிறியதாக்கும் வேலையை அவன் எடுத்துகொண்டான். இதனை முடித்தவுடன். கரி, உப்பு கொஞ்சமாக, பொறிப்பூண்டு துண்டுகள், பனம்பூ துண்டுகள் ஆகியவற்றை குந்தாணியில் (உரல் போன்று கல்லால் ஆனது, பொதுவாக உரலை மாவாட்டவும்,  குந்தணியை நெல் குத்தவும் பயன்படுத்துவர்) போட்டு உலக்கையை வைத்து இடித்தான். கலவை நன்கு இடிந்தபின் அதனுடன் நெல் உமி, வரகு உமி ஆகியவற்றை சேர்த்தான். சென்ற பொங்கலுக்கு அம்மாவுக்கு தமிழக அரசின் மூலம் கிடைத்த கைத்தறி சேலை கிழிந்துவிட்டதால், அம்மா இப்பொழுது அதனை பயன்படுத்துவதில்லை. காத்தி பொட்டலம் கட்டுவதற்கு உகந்தது இந்தமாதிரியான நூல் துணிதான். பொட்டலம் கட்ட அம்மாவிடம் அந்த சேலையை வாங்கிகொண்டான்.

பொட்டலம் கட்ட அப்பாவின் உதவியை நாடினான் காட்டுபூச்சி. அப்பாசேலையை செவ்வக துண்டுகளாகவும், கயிறு போன்றும் கிழித்து கொண்டார். இடிக்கப்பட்ட கலவையில் கொஞ்சம் எடுத்து ஒரு செவ்வக துண்டில் வைத்து சுருட்டினார். படியை(அரிசி அளக்க பயன்படுவது) விட சற்று சிறிய அளவிலான உருளையாகினார். கயிறுபோன்று கிழித்த துணியை கொண்டு உருளை அவிழாத வண்ணம் கட்டினார். இதேபோல் காட்டுபூச்சி இடித்த கலவையைக் கொண்டு ஐந்து உருளைகளை உருவாக்கினார் அப்பா. காத்தி சுத்த பயமாக இருந்தாலும் தனக்கென்று இரு பொட்டலங்களை வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள் சாந்தி. மீதமிருப்பதை காட்டுபூச்சி பதிரப்படுத்தி கொண்டான்.

மண்பாண்டங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள குடும்பம், கார்த்திகை ஆரம்பித்தவுடன் அகல் விளக்குகள் தயாரிப்பில் இறங்கிவிடுவார்கள். தீபத்திற்கு மூன்று நாட்கள் முன்னதாக வீடுவீடாக சென்று அகல்களை விற்பனை செய்ய தொடங்கிவிடுவார்கள். ஊரில் விற்பனை முடித்து, காட்டுகொட்டாய் பகுதிகளுக்கு தீபம் அன்று காலையில் தான் வருவார்கள். அப்படி தீபம் அன்று காட்டுபூச்சி வீட்டிற்கும் வந்தார் அகல் விற்பவர். காட்டுபூச்சியின் பாட்டி மூன்று படி அரிசி கொடுத்து 25 அகல்கள் வாங்கினார். அகல்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து பின்னர் எடுத்து பயன்படுத்துவது வழக்கம். ஒரு அண்டாவில் அகல்களை போட்டு தண்ணீரை ஊற்றினார் பாட்டி. அகல்கள் சலசல என்ற சத்தத்துடன் தண்ணீரை குடித்து. அண்டாவிலிருந்து காற்று குமிழ்கள் சத்தத்துடன் வெளியேறுவதை ஆச்சர்யமாக பார்த்துகொண்டிருந்தாள்.

மாலை ஐந்து மணியானதும் பாட்டி சாந்தியிடம் அண்டாவிலிருந்த அகல்களை வெளியே எடுத்து வைக்குமாறு கூறினார். அகல் எடுக்கச்சென்ற சாந்திக்கு ஆச்சரியம் அண்டாவில் பாதிக்கு கீழ் தண்ணீர் குறைந்திருந்தது. அகல்கள் அவ்வளவு தாகத்தில் இருந்திருக்கின்றன. சாந்தி அகல்களை எடுத்து கிழே வரிசையாக வைத்தாள்.  அதற்குள் பாட்டி பஞ்சை திரித்து அகலுக்கான திரி செய்ய தொடங்கி இருந்தார். சாந்தி பாட்டி தயாரித்த திரியை ஒவ்வொன்றாக அகல்களுக்கு அணிவித்தாள். ஆதவன் மறைய காத்திருந்தனர்.

காட்டுபூச்சியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல், அப்பா காத்தி கட்ட தயாரானார். நொச்சி செடியிலிருந்து வெட்டிய நொச்சி குச்சிகளில் (வளையும் தன்மை கொண்டது) முதலில் மூன்றை எடுத்தார் ஒவ்வொன்றும் சுமார் அரை மீட்டர் நீளம் கொண்டது, காட்டுபூச்சி தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த உருளை பொட்டலத்தோடு நின்றிருந்தான். அந்த மூன்று குச்சிகளின் ஒருமுனையில் சனலை கொண்டு இருக கட்டினார். அப்பா பொட்டலத்தை வாங்கி, குச்சிகளுக்கு இடையில் வைத்தார். மறுமுனையையும் சனலைக்கொண்டு மூன்று குச்சிகளையும் சேர்த்துகட்டினார். இப்பொழுது ஒரு மீட்டர் நீளமுள்ள ஒரு கயிறை கட்டினார்.ஒருவழியாக  காத்தி தயாரிப்பு நிறைவடைந்தது. இதேபோல் சாந்திக்கும் ஒரு காத்தியை செய்துகொடுத்தார். காட்டுபூச்சி காத்தியின் மூன்று குச்சிகளுக்கு இடையில் உருளை பொட்டலத்தில் நெருப்பு துண்டுகளை வைத்தான், அப்பா அதனை அசைக்காமல் அப்படியே எடுத்துசென்று அருகிலிருந்த வேப்பமர கிளையில் கட்டி தொங்க விட்டார். இது கனிவதற்க்கு பத்து நிமிடங்களாவது பிடிக்கும்.இதற்கிடையில் வீட்டில், குப்பைமேட்டில், கிணற்று படியில் என எங்கும் அகல்கள் எற்றபட்டிருந்தன. அந்த முன்னிரவு நேரத்தில் ஜெகஜோதியாக இருந்தது வீடு.

காத்தி நன்கு கனிந்தவுடன் மரத்திலிருந்து அவிழ்த்து காட்டுபூச்சியிடம் கொடுத்தார் அப்பா. ஒருமுனையிலிருந்த கயிற்றை இருக பற்றிக்கொண்டு சுற்ற ஆரம்பித்தான். பொறி பிரமாதமாக வந்தது. காட்டுபூச்சி காத்தி சுற்றுவதை சற்று தொலைவில் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது. கம்பிமத்தாப்பு யாருடைய உதவியுமின்றி அந்தரத்தில் வட்டமடிப்பது போல இருந்தது. கண்கொள்ளாக்காட்சி. திடீரென வானதில் வெடி சத்தம் கேட்டது. வானவெடி சத்தம் ‘இன்னும் சற்று நேரத்தில் சொக்கப்பானை கொளுத்தப்படும்’ என்ற செய்தியை தாங்கி வந்தது. குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு செல்ல தயாரானார்கள். தனது காத்தியை நண்பர்களுக்கு காட்டவேண்டும் என்ற ஆவலுடன் சொக்கப்பானை கொளுத்தும் கோவிலை நோக்கி குடும்பத்தினருடன் வேக நடையிட்டான் காட்டுபூச்சி. சாந்தி தன் காத்தியை வீட்டிலே வைத்துவிட்டு சென்றாள். சொக்கப்பானை என்பது நடுவில் பச்சை வாழைமரம் நட்டு சுற்றிலும் துவரை மெளார் (மகசூல் முடிந்து வெட்டப்பட்ட காய்ந்த செடி) நட்டு அதை சற்றிலும் காய்ந்த தென்னங்கீற்று நட்டு. பின்னர் அதை கொளுத்துவர் சுற்றிலும் உள்ள மக்கள் தீச்சுவாலையில் உப்பை போடுவார்கள். சொக்கப்பானை படபட வென்று மிகுந்த வெடி சத்தத்துடன் எரியும்.


காட்டுபூச்சி தன் நண்பர்களிடத்தில் சுற்றிக்காட்டி பெருமைகொண்டான். சொக்கப்பானை எரிந்து முடிந்தவுடன் குடும்பத்துடன் வீடுதிரும்பினான் காட்டுபூச்சி. அதற்குள் உருளை பொட்டலம் காலியாகி இருந்தது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அடுத்த பொட்டலத்தை மூன்று குச்சிகளுக்கிடையில் நுழைத்தான்.

நான் காத்தி எனச்சொல்வதை, உங்கள் பகுதியில் எவ்வாறு அழைப்பார்கள்? என்று பின்னூட்டத்தில் மறக்காம சொல்லிட்டுபோங்க


காத்தி சுத்துவதை போன்ற படம் வலையில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் அனுப்புங்களேன்.

வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

Saturday 3 December, 2011

நாமும் சொல்லலாமே ஆலோசனை!



காட்டுப்பூச்சி. மழை மீது பயங்கர கடுப்பில் இருந்தான். மழைபெய்தா சந்தோஷப்பட இவன் கிராமத்து விவசாயியா என்ன? மழைபெய்தால் பேண்டை முழங்காலுக்கு மேல் மடித்து விட்டு கேழே பாதாள சாக்கடை இருக்க கூடாது என்று தன் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டே தாண்டித்தாண்டி செல்லும் ஒரு சென்னைவாசி. காட்டுப்பூச்சி பதையாத்திரியாக இவ்வளவு கஷ்ட்டப் பட்டாலும். தான் பேருந்தில் போகும்போது இருசக்கர வாகன ஓட்டிகளுக்காகவும், இந்த குண்டும் குழியுமான சாலைகளில் பயணம் செய்ய சுங்கவரி கட்டி காரில் சொகுசுப் பயணம் செய்பவர்களுகாகவும் பரிதாபப்படுவான்.
காட்டுப்பூச்சி இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும்போது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை படித்தான். அதன் சுட்டி 


பி.டபிள்யூ.சி. டேவிதார் புதிதாக சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கபட்டார். அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தபோது சொன்னார் “மழைநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தர தீர்வுகாணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதற்க்கு குடியிருப்போர்களின் உதவி தேவைப்படுகிறது. ஏனென்றால் அந்தந்த பகுதிமக்களுக்குதான் தங்கள் பகுதியை பற்றி நன்றாக தெரியும்“ என்றார். இதற்காகவே சென்னை மாநகராட்சி ஒரு மினஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளது. stopflooding@chennaicorporation.gov.in இந்த மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பலாம். உங்கள் ஆலோசனைகளை எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக படமாக வரைந்து அனுப்பினால், பரிசீலனை செய்பவர்களுக்கு எளிதாக இருக்கும். டிசம்பர் 16குள் உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பவேண்டும்.

காட்டுப்பூச்சி இந்தத்தகவலை படித்தவுடன் தன் பகுதிக்கான தீர்வை பகுதிமக்களுடன் கலந்தாலோசிக்க தொடங்கிவிட்டான்.
நாமும் சொல்லாமே ஆலோசனை?

Friday 11 November, 2011

மனிதம் கொன்று மாக்கள் வளர்ப்போம்!


சமீபத்தில் இப்பூவுலகின் மக்கள் தொகை 700 கோடியை எட்டியதாக செய்திதாள்களில் படிக்க நேர்ந்தது. 700 கோடியாவது குழந்தை என்ற பெருமையை பிலிப்பைன்ஸ் நாட்டு குழந்தையும், இந்தியத்திருநாட்டின் உத்திரப்பிரதேச குழந்தையும் பகிர்ந்து கொண்டுள்ளன என்று தோராயமா கணக்குப்போட்டு சொல்லிட்டாங்க. நான் என் தாய்க்கு இரண்டாவது குழந்தை என்று வைத்துக்கொள்வோம். என் அண்ணன் இறந்துவிட்டால் என் தாய்க்கு நான்தான் தலைசன் குழந்தை ஆகிவிடுவேனா என்ன? உலக மக்கள் தொகை பற்றி வலையில் தேடும்போது, விக்கிபீடியா எனக்கு பல சுவாரஸ்ய தகவல்களை கொடுத்தது. அதில் ஒன்று ஜப்பானின் மக்கள் தொகை குறைந்துகொண்டிருக்கிறது என்பது. நான் விக்கிபீடியாவை நம்பாமல் கூகிள் தேடுபொறியில் ஜப்பானின் மக்கள் தொகை பெருக்க விகிதம் என்ன? என்று தேடினேன். கிடைத்த பதில் கீழ்காணும் படம்தான். ஆம் விக்கிபீடியா சொன்னது உண்மை தான். இதுபோல உலகின் மக்கட்தொகை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.


பூமித்தாயிடம் எனது கேள்வி, எம்குலத்தாய்க்கு தன் கடைசி காலங்களில் பெண்பிள்ளைதான் கஞ்சி ஊற்றும் என தெரிந்திருந்தும், தனக்கு ஆண்குழந்தை தான் வேண்டும் என ஆசைப்படுவதை போலவே நீயும் இந்த மனிதக்குழந்தைகள்தான் உம்மை உருகுலைப்பது என்று அறிந்திருந்தும் அவர்கள்மீது கொள்ளை ஆசை கொண்டிருப்பதெப்படி?
என் நண்பன் ஒருவன் பாலக்காட்டிலிருந்து சென்னைக்கு புறப்படும் ரயிலில் சமீபத்தில் பயணம் செய்ய நேர்ந்தது. நண்பனிடம் உறுதியாக்கப்பட்ட பயணசீட்டு இல்லை, மாறாக வெயிட்டிங் லிஸ்ட் சீட்டு இருந்தது அதைவைத்து பயணசீட்டு பரிசோதகரிடம் பேசி இருக்கையை உறுதிசெய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஸ்லீப்பர் பெட்டியில் ஏறிவிட்டான். பரிசோதகர் அவன் இருந்த பெட்டிக்குள் நுழைந்தவுடன். அவரிடம் சென்று பேசிவிட்டான், பரிசோதனை முடிந்தவுடன் நாம் மீண்டும் பேசுவோம் என்று சொல்லிவிட்டு தன் பணியை செவ்வனே தொடங்கினார். பிச்சைகாரர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார், பயணச்சீட்டை கேட்டிருக்கிறார், இல்லை என்று தெரிந்தவுடன் காலால் எட்டி உதைத்திருகிறார். ஒரு மீட்டர் தொலைவாவது சென்று மற்றொரு இருக்கையில் இடிதுக்கொண்டார் உதை பட்டவர். இதைப் பார்த்தவுடன் நண்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. இன்னொரு இனிய சம்பவம் நடப்பதற்கு காத்துகொண்டிருப்பது நண்பனுக்கு தெரிந்திருப்பது நியாயம் இல்லை. சற்று பயத்துடன் நின்றுகொண்டிருகிறான் இருக்கைகள் காலியாக இருந்தும் அமரவில்லை. இன்னொருவர் பரிசோதகரிடம் மாட்டிகொண்டார். இம்முறை பரிசோதகரின் கை பயணியின் கன்னத்தில் இறங்கியது வசவுசொற்க்களுடன் கூடிய அர்ச்சனையும் இலவச இணைப்பாக கிடைத்தது. இதைப்பார்த்த நண்பன் கலவரம் ஆகிவிட்டான்.

பதற்றத்தை மறைத்துக்கொண்டு நின்றபடியே பயணத்தை தொடர்ந்தான். மேற்படி சம்பவங்களில், பரிசோதகர் பல சண்டிப் பயணிகளை பார்த்திருப்பதால் சக மனிதர்களிடையே காட்டும் குறைந்தபட்ச அன்பு, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை இழந்திருக்ககூடும். சம்பவத்தில் பதிக்கப்பட்ட நபர்கள் “இவிங்க எப்பவுமே இப்படிதான் பாஸ், திட்டிக்கிட்டும் அடிச்சிகிட்டும் இருப்பாங்க.. வாங்க பாஸ் நம்ம வேலையை நம்ம கண்டினியு பண்ணுவோம்” (ஒரு சினிமா வசனம்)  என்பதை போல குறைந்தபட்ச மான, ரோசங்களை இழந்து நிற்கின்றனர். இது போன்ற மாற்றங்களுக்கு முழுமுதற் காரணம் மக்கள் தொகை பெருக்கம். ஒருவழியாக பரிசோதகர் தன் பணியை முடித்துவிட்டு இருக்கையில் அமரும்போது நண்பன் மீண்டும் தனது பேச்சுவார்த்தையை துவக்கினான். “ஸ்லீப்பர் கிளாஸ்ல ஒரு டிக்கட் கூட இல்லை” என்றார். முதல் வகுப்பில் ஒரு இருக்கை இருப்பதாகச் சொல்லி விலை 900 ரூபாய் என்றார். வேறு வழி இல்லாமல் சரி என்று சொன்னான். பணத்தை வாங்கிக்கொண்டு இருக்கை எண்ணை சொல்லி அதில் படுத்துக்கொள்ள சொன்னார். ரசீது எதுவும் கொடுக்காததால், இவர் இடையில் எதாவது ஸ்டேஷனில் இறங்கி கொண்டு வேறொருவர் வந்தால் என்னசெய்வது என்று நண்பனுக்கு ஒரு பயம். அதனால் பணம் கொடுத்தவரிடம் சென்று நீங்கள் சென்னை வரை வருவீர்களா? வேறொரு டி.டி வந்தால் என்ன செய்வது என்று அவரிடம் கேட்டான். நீங்க இன்னும் தூங்கலையா தம்பி, போய் கவலைபடாம தூங்குங்க நான் சென்னை வரைக்கும் வருவேன் என்றார். இப்படியாக அவன் சென்னை வந்து சேர்ந்தான்.

கீழேயுள்ள காணொளிகளை பாருங்கள். ஒன்று நம்ம கோவை மாநகரில் நடந்தது மற்றொன்று சீனாவில் நடந்தது.







மக்கள் தொகை அதிகமாகும்போது சக மனிதர்களின் உயிர் துச்சமென மதிக்கப்படுகிறது. “நாலுபேருக்கு நல்லதுன்னா எது செஞ்சாலும் தப்பில்ல” என்ற வசனம் போய் “நமக்கு நல்லதுன்னா நாலுபேரை போட்டுத்தள்னாலும் தப்பில்ல” என்ற வசனம் வந்துவிட்டது. யதார்த்தம் என்ற மாயையில் சுயநலம் பெருமைப்படக்கூடிய ஒரு பண்பாக பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு பல காரணங்கள், மருத்துவ முன்னேற்றம், சராசரி மனித ஆயுட்காலம் உயர்வு என அடுக்கலாம். மூன்று தலைமுறை வாழ்ந்த இடங்களில். இன்று நான்கு தலைமுறை வாழ்கிறது.


சரி பெருக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்? சட்டங்கள் மூலம் கட்டுபடுத்தலாமா? அப்படிச்செய்தால் தனிமனித உரிமை குழுக்கள் போராட்டம் நடத்துமோ? சமூக விழிப்புணர்வு போன்றவற்றால் தடுக்கமுடியுமா? நீங்கள்தான் பின்னூட்டத்தில் வந்து சொல்லணும்.

இன்றைய தேதியில் கருத்தரிப்பு மையம் நல்ல பிசினஸ். திருமணமான தம்பதிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்குள்ளாக குழந்தை இல்லையென்றால் அவ்வளவுதான். தம்பதிகளுக்கே அதை பற்றிய கவலை இல்லையென்றாலும். சுற்றுபுறம் ஆளாளுக்கு ஒரு வைத்தியரை பார்க்கசொல்வார்கள். அதுவும் பெற்றோர்களில் புலம்பல்கள் தாங்கமுடியமலே கருத்தரிப்பு மையத்துக்கு சென்று பணத்தை கொட்டி தம்பதிகள் தங்களுடைய வாரிசுக்கு ஏற்பாடு செய்யவேண்டும். குழந்தை பிறந்தால் தான் ஆண்மை, பெண்மை முழுமைபெற்றதாக அர்த்தம். அப்பொழுதுதான் சமூத்தில் மரியாதையை கிடைக்கும். நாமெல்லாம் போதிதர்மர்களா என்ன, சந்ததிகளுக்கு நம்முடைய டி.என்.ஏ அவ்வளவு முக்கியமா? குழந்தை இல்லையென்றால், ஏன் ஆதரவற்ற குழந்தைகளில் ஒருவரை தத்தெடுத்துகொள்ளக்கூடாது? எப்படியாவது பெருக்க விகிதத்தை கட்டுப்படுதியாகவேண்டும் இல்லையேல், மனிதம் அற்ற தனிமனிதர்கள் தங்களுக்குள்ளாகவே யுத்தமிட்டு இறக்க நேரிடும். ஒருவேளை அதை நோக்கித்தான் நாம் பயணம் செய்கிறோமா?

Monday 24 October, 2011

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது?


தமிழகத்தில் இயங்கும் கட்சிகளை பற்றி நினைக்கும்போது எல்லோரையும் போலவே எனக்கும் விளங்காத (விடைதெரியாத) அதே கேள்விதான். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது? காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா? இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா? இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன? விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா? இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா? இது நம் பிரச்சனையில்லை, எனவே தோல்விக்கான காரணத்தை அந்த கட்சி தன் சொந்த செலவில் கண்டுபிடித்து கொள்ளட்டும். திமுக சார்பு பத்திரிகைகள் தனது கட்சியின் தோல்வி குறித்து வருத்தபடாமல், தேமுதிக, காங்கரஸ், பாமக கட்சிகளின் தோல்வியில் இன்பம் அடைகின்றன.
ஒரு தனிப்பட்ட கட்சியின் வாக்கு வங்கி மிகவும் ரகசியமான ஒன்றாகவே இவ்வளவு நாட்களாக இருந்துவந்தது. இதற்கான காரணம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். இந்த ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும். இதேபோல் சட்டமன்ற / பாராளுமன்ற பொதுத்தேர்தல் களையும் இந்த கட்சிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்ற விவரங்களை அறிந்துகொள்ள இணையத்தில் உலவும் போது  கீழேயுள்ள புள்ளி விவரங்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காண முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த பல தகவல்களை ஆணையம் அழகாக நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட காண முடிந்தது. ஆனால் உள்ளாட்சியிலேயே கடை மட்ட பதவியான கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அளவில் தகவல்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்குள் ஆணையம் அந்த வசதியையும் கொண்டுவந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் சுட்டி
நன்றி : தமிழக தேர்தல் ஆணையம்
இந்த புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவது,

1.       49.15%  இடங்களில் அஇஅதிமுக வெற்றிபெற்றுள்ளது. (வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது சென்னை மாநகராட்சி மேயரும், சின்னசேலம் பேரூராட்சியின் வார்டு உறுப்பினரும் சமப்படுத்தப்பட்டுள்ளனர்).

2.       20.20% இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

3.       16.52% இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

4.        4.26%  இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.

5.       3.69% இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

6.       மீதமுள்ள 6.57%  இடங்களில் மற்ற 25+ கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.

7.       தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இயங்கிகொண்டிருகின்றன.

8.       இதில் மற்றவை(others) என்று விசிக வுக்கு மேலே உள்ளதை கவனிக்கவும். தேர்தல் ஆணையமே குழம்பிப்போய் இந்த கட்சிகளின் பெயரை வெளியிட முடியாமல் மற்றவை என்ற ஒரே வகையில் வெளியிட்டுள்ளது.

9.       இருபதாயிரத்து சொச்ச இடங்களில் ஒன்றைக்கூட வெல்லமுடியாமல் 12 கட்சிகள் உள்ளன. இவையெல்லாம் வட நாட்டு கட்சிகளா? வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும்? ஒன்றும் புரியவில்லை.

10.    தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். மூன்றாவது பெரிய கட்சி, அப்படியொன்றே இல்லை என்றுதான் இந்த புள்ளி விவரம் சொல்கிறது.

11.    அஇஅதிமுக மற்றும் திமுக தவிர மற்ற அணைத்து கட்சிகள் வென்ற மொத்த இடங்கள் 2840 ஆனால் சுயேட்சைகள் வென்ற இடங்கள் 3326.

12.    ஆக மூன்றாவது சக்தி அல்லது மாற்று சக்தி எனப்படுவது சுயேட்சைகள். எனவே மாற்றம் விரும்பும் பதிவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக களம் இறங்குங்கள். குடிமகனின் ஆதரவு என்றும் உங்களுக்கே.

மனதில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்!! அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Thursday 13 October, 2011

மரணம் [ சிறுகதை முயற்சி ]




நிசப்தமான காலை பொழுது. ரமேஷ் கண்களை தேய்த்தவாறு தலையணைக்கு அருகில் இருந்த கைபேசியில் மணி பார்க்கிறான். கைபேசித்திரை  7.05 என காட்டுகிறது. படுக்கையிலிருந்து எழுகிறான். சோம்பல் முறித்து முகம் கழுவுகிறான். படுக்கையை மடித்து வைக்கலாம் என்று கலைந்து கிடந்த படுக்கையை நோக்கி நடக்கிறான். சுவற்றுக்கு கிழே  ஒரு பல்லி இறந்து கிடப்பதை கவனிக்கிறான். ஆம் நேற்றிரவு ரமேஷ் சுவற்றில் பார்த்த அதே பல்லிதான். உடலில் காயங்கள் ஏதுமில்லை ஆனாலும் இறந்து கிடந்தது.  

பெரும்பாலான தமிழக இளைஞர்களைப் போலத்தான் ரமேஷும். சொந்தபந்தங்கள் எல்லாம் ஊரில் இருக்கையில், தான் படித்த படிப்புக்கேற்ற ஒரு நல்ல வேலையை சென்னையில் தேடிக்கொண்டான். தினமும் குறைந்தது பத்துமணி நேரமாவது கணினியில் வேலை. சில நாட்கள் இந்த பத்துமணி நேரம் போவதே தெரியாது என்கிற அளவுக்கு அவனுக்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான வேலை இருக்கும். சில நாட்களில் நேரத்தை கடத்த வேண்டி இருக்கும். வேலை, சாப்பாடு மற்றும் உறக்கம் இவைகள் தான் ரமேஷின் ஒருநாள்.

பல்லி. முதுமை அடைந்திருந்தது. சிலநாட்கள் நல்ல உணவு. பலநாட்கள் பட்டினி.  என்று வாழ்கையில் பல கஷ்டங்களை சந்தித்த பல்லி. ஏன் தான் பல்லியாக பிறந்தோமோ? என்று மனிதர்களை போலவே இதுவும் சலித்துக்கொள்வதுண்டு. பிறகு இது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து அடுத்த வேளை உணவுக்கான வழியைத் தேடும். கடந்த சில நாட்களாகவே இரையில்லாமல் மிகுந்த பசியில் இருந்தது. ஆனாலும் ஓயாமல் இரையை தேடிக்கொண்டிருந்தது. ஒரு இரை சற்று தொலைவில் இருப்பதை கண்டுகொண்டது. தனது அனுபவத்தை பயன்படுத்தி எப்படியாவது பிடித்துவிடுவது என்ற எண்ணத்தில் இருந்தது.

ரமேஷ் தனது அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். கடைசி நேரத்தில் ஒரு வேலையை கொடுத்து முடிக்கசொல்லியதால் தனது மேனேஜர் மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அறை நண்பன் தூங்கிகொண்டிருந்தான். கை, கால்களை கழுவிவிட்டு நேரே படுக்கைக்கு சென்றான். வேலை வழக்கத்தை விட சற்று அதிகமென்பதால் உடல் அசதி இருந்தது. படுத்தவன் விளக்கு அணைக்க மறந்ததை உணர்ந்து எழுந்தான். அப்பொழுதுதான் அந்த பல்லி பூச்சியை நோக்கி மெதுவாக நகர்வதை பார்த்தான். அவன் ஏனோ அந்த பல்லியை மேனேஜர் போலவும், பூச்சி தம்மை போலவும் பாவித்து. ‘நீங்கள் எல்லாம் உங்களைவிட எளியவர்களிடம் தான் உங்கள் பலத்தை காட்டுகிறீர்கள், உங்களுக்கு சமமானவர்களிடமோ அல்லது உங்களைவிட பலசாலிகளிடமோ இல்லை’ என்று பொருமிக்கொண்டே ஒரு குச்சியை எடுத்து பல்லிக்கும் பூச்சிக்கும் இடையில் தட்டினான். பூச்சி சுதாகரித்துக்கொண்டு ஓடிவிட்டது. பல்லி ஏமாந்தது. பூச்சியை காப்பாற்றி விட்டோம் என்று ரமேஷுக்கு ஒருவித சந்தோஷம். விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சாய்த்தான்.

Friday 23 September, 2011

தந்தை பெரியாரை மதத் தலைவராக்க முயற்சியா?


நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது. பேச்சாளர்கள் அனைவரும் பிராமண எதிர்ப்பு வாசகங்களை மட்டுமே பிரதானமாக பேசினர். பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன. தி.க. வுக்கு ஒருவேளை செலக்ட்டிவ் அம்னீசியாவோ? பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புவதாக தெரிகிறது. சாதிக் கலவரமும் மதக்கலவரமும் மலிந்து கிடக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவைதானா? தமிழர்களின் பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்த என் தலைவனின் இயக்க தொண்டர்களா நீங்கள்?
இது அரசியல் இயக்கமல்ல சமூக இயக்கம் என மார் தட்டி கொள்ளும் உங்களுக்கு, கிராமத்து தலித் இன்றும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான் என தெரியாதா? அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யலாமே?  அதைவிடுத்து திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, சொற்பொழிவாற்றுவது, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம், கல்விக்கூடங்களை கொண்டு கிருத்தவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை, பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்துவிட்டது.
பெரியார், நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார். பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை நீங்கள் பரப்பவில்லை. பிராமண எதிர்ப்பையும், இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர். அந்தணர்களின் அதிகாரம் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்த அந்த காலகட்டத்தில் பெரியார் நடத்திய அந்தண எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஒருவித நியாயம் இருந்தது. எவ்விதத்திலும் பொருந்தாத இந்தகாலத்திலும் அதையே தூக்கிகொண்டு திரிவது பெரியார் தொண்டர்களுக்கு அழகல்ல. பெரியாரின் கொள்கை பரப்பு என நீங்கள் செய்யும் செய்கைகள் மூலம் மக்களுக்கு அவரின் மீதான மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்புள்ளது. உண்மை தொண்டன் இதைச் செய்வானா? நிச்சயம் மாட்டன்.


சமூக இயக்கமாக நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது. அணு மின் நிலையங்கள் வேண்டாம் என போராடலாம். தமிழக நதிகளை இணைக்க கோரி போராடலாம். உள்ளூர் எரி, குளங்களை சுத்தம் செய்யலாம். இது போன்றவற்றை செய்யும்போது நீங்கள் பெரியார் தொண்டர்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்.
ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன.

Sunday 18 September, 2011

பயணம் – இனிப்பும் கசப்பும்!


அன்று அந்த அதிவேக ரயிலில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். ஆம் சவுண்ட் ஸ்பீட் ட்ரெயின் சர்வீஸ்(SSTS) என அழைக்கப்படும் ரயில். அதாவது மணிக்கு 1200 கி.மீ என்பது இந்த ரயிலின் உச்சபட்ச வேகம். குறைந்தது மணிக்கு 1000 கி.மீ கியாரண்டி என்கிறார்கள். இது ஒலியின் வேகத்தை விட சற்றே குறைவானாலும் இந்த ரயிலை அப்படிதான் அழைக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பத்திரிகைகள், இந்தியாவில் ஒலியின் வேகத்தில் பயணிகள் ரயில் என கூவின. முன் பதிவு செய்யப்பட்ட பயனசீட்டுடன் ஆட்டோவில் ஏறி அமர்தேன். எஸ்.எஸ்.டி.எஸ் ஸ்டேஷன் போகணும் என்றேன். ஆட்டோ முடுக்கப்பட்டது. சிறிது நேர ஆட்டோ பயணத்தில் ஸ்டேஷனை அடைந்தேன்.


ஒரேயொரு பிளாட்பார்ம் தான் இருந்தது. அதனால் நான் செல்ல வேண்டிய ரயிலை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. மொத்தம் 7 பெட்டிகள் அதில் 5 பயணிகளுக்கு. முதல் பெட்டி செலுத்துனர் கட்டுப்பாட்டு அறை. கடைசி பெட்டி பயணிகளுக்கான சேவை மையப்பெட்டி. உள்ளே நுழைந்ததும் இது இரயிலா இல்லை விமானமா என்ற கேள்வி உதித்தது. காரணம் ரயிலின் உள் கட்டமைப்புகள் தான். எஸ்.எஸ் இரண்டில் 45ஆவது இருக்கை என்னுடையது, அதிர்ஷ்டவசமாக அது ஜன்னல் ஓர இருக்கை. கண்ணாடி ஜன்னல்கள் தான். ஆனால் சற்று தொலைவில்லுள்ள பொருட்களை மட்டுமே கானமுடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேகத்தில் அருகிலுள்ள பொருட்களை பார்க்கும்போது மயக்கம் வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. சற்று நேரத்தில் சீட் பெல்ட் அணிய சொல்லி ஒலிபெருக்கி கத்தியது. சேவையாளர் ஒருவர் வந்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று பார்த்து சென்றார்.

சிறிது நேரத்தில் ரயில் முடுக்கப்பட்டது, தரையில் முதல்முறையாக அதிவேகத்தில் செல்ல போகிறேன் என்பதால் ஒருவித பயம் கலந்த குஷியில் இருந்தேன். திடீரென டம், டம் என்ற சத்தம் காதை பிளந்தது, தடம் புரண்டுவிட்டதோ என்ற பயம், விழித்துக்கொண்டேன். அட ச்சீ.. அல்ப்ப கனவு. நான் எங்கு இருக்கிறேன்? டம், டம் என்ற சத்தம் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து வந்தது. டீ.. காப்பி.. சப்ட்ரவங்க சாப்பிடலாம் என்றான், கையில் உள்ள தடியையும், பேருந்தில் உள்ள தகரத்தையும் வைத்து ஒலி எழுப்பிகொண்டிருந்த ஒரு வீனாப்போனவன். ஆம் அந்த பேருந்தில் தான் அமர்திருக்கிறேன். நான் நாளை நடக்க இருக்கும் என் பள்ளிக்கால நண்பனின் திருமணத்திற்காக என் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். கைபேசியை எடுத்து மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. அந்த தடியடியன் மீது கோபம் பன்மடங்கானது. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூதாட்டி பல சாபங்களை தடியடியனுக்கு விட்டாள். அனைவரையும் எழுப்பிவிட்டு அந்த தடியடியன் வேறொரு பேருந்தை நோக்கி நடந்தான். 

பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். அந்த ஹோட்டலை பார்த்தவுடன். விழுப்புரதிற்கு அருகில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டேன். அடிவயிறு முட்டியது. சாலையோரத்தில் கழிக்கலாம் என அந்தபக்கம் சென்றேன், இன்னொருவன் தடியை வைத்துக்கொண்டு இங்கல்லாம் போககூடாது. உள்ள இருக்கிற டாய்லெட்ல தான் போகணும் என்றான். வேறுவழியின்றி அந்த கமகமக்கும் கழிவறைக்கு சென்றேன். ஒன்னுனா மூனு ருவா, ரெண்டுனா அஞ்சி ருவா என்றான். மூன்று ரூபாய் கொடுத்து சென்றுவந்தேன். மூன்று ரூபாய் கொடுப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால். இந்த சாலையோர ஹோட்டல்களை பற்றி முன்பே எனக்கு தெரியும். இந்த வழித்தடம் எனக்கொன்றும் புதிதல்ல. இங்குள்ள பொருட்களை அதிகபட்ச விலையில்(M.R.P)  150%-200% கொடுத்துதான் வாங்கமுடியும். ஈ மொய்க்கும் அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட கிட்டத்தட்ட சரவணபவன் ரேஞ்சிக்கு பில் கட்ட வேண்டிவரும். எனவே எதையும் வாங்க முற்படாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன். நம்மவர்களை இப்படி பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பு நிகழ்ந்தபோது  ஜப்பானியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று நாம் அனைவரும் இணையத்தில் படித்திருப்போம். இக்கட்டான சூழ்நிலையில் ஜப்பானியர்கள் நடந்துகொண்ட விதத்தினை அழகாக தொகுத்து புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதனை சுட்டு இங்கு இணைத்துள்ளேன். அதனை படித்தால் நெகிழ்ச்சி உணரப்படுவது நிச்சயம். நம்மவர்களிடம் அடிப்படையிலேயே ஏதோ தவறு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நன்றி: புதிய தலைமுறை

படத்தில் கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம்.

பல்வேறு குழுக்கள் கறுப்புப்பணத்தை மீட்டுவர குரல்கொடுகின்றன. ஆனால் எந்த ஒரு குழுவும் கறுப்புப்பணம் உருவாகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சொல்வதாக எனக்கு தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட ஹோட்டலை போல சிறிய அளவில் ஆனால் மிகப்பெரும் எண்ணிக்கையில் கறுப்புப்பணம் உற்பத்திசெய்யப்படுகிறது. மிகப்பெரும் எண்ணிக்கையில் குற்றம் நடந்தால் நம்நாட்டில் அது ஏனோ குற்றமாகக் கருதப்படுவதில்லை. அரசு/ சட்டம் என்ன சொல்கிறது? வரி செலுத்துவது குடிமக்களின் கடமை என்கிறது. இந்த காலத்தில் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எதிர்பார்க்க முடியாது. அதனால் வரியை ஒழுங்காக வசூலிப்பது அரசின் தலையாய கடமையாக இந்த குடிமகன் நினைக்கிறான். அரசு மாத வருமான காரர்களிடம் எளிதில் வருமான வரியை வசூலித்து விடுகிறது எப்படி? கார்பரேட் கம்பெனிகளிடம், உங்கள் எம்ப்லாய் களின் வருமான வரியை செலுத்தினால் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அதை சாதித்து கொள்கிறது. கார்பரேட் கம்பெனிகள் நம்மிடமிருந்து புடுங்கி அரசிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிகொள்கிறது. ஊர்ல சொந்த பிஸ்னஸ் செய்றவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரேவொரு வேலையை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! அய்யோ.. ய்யோ.. ய்யோ.

ஆக யாரும் மனமுவந்து வரி செலுதப்போவதில்லை. அரசு தனது வசூலிக்கும் இயந்திரத்தை(அமைப்பு / சட்டம்)  தூசு தட்டி இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் பழுது பார்க்கவேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட்டு புதிய இயந்திரத்தை வடிவமைக்க வேண்டும். இயந்திரத்தை இயகுபவர்களுக்கு உரிமம் வழங்கும்  வழிமுறைகளில்(தேர்தல்) நிறைய மாற்றம் கொண்டுவரவேண்டும். இயந்திரத்தை சரியாக இயக்கவில்லை எனில் உரிமம் உடனடியாக ரத்து செய்யக்கூடிய உரிமையை உரிமம் வழங்கியவர்களுக்கு கிடைத்திட வழிசெய்தல் வேண்டும். நம்மவர்கள், வரி கொடுத்தால் அரசு அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர் என்றும் சொல்லி தாங்கள் வரி செலுத்தாததை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு குடிமகன் தனது கடமையைச் செய்யவில்லையெனில் அவன் அரசை தட்டி கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். காசு வாங்கிக்கொண்டு ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினரை தேர்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் தனது தொகுதிக்கு நலத்திட்டங்களை கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். அரசும் குடிமக்களும் மாறிமாறி குற்றம் சுமத்துவதை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யவேண்டும்.

பயணம் தடம்புரண்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறது. சரிவிடுங்கள் புலம்பல்கள் இப்படிதான் இருக்கும். இது எல்லாத்துக்கும் அந்த தடியடியன் தான் மூலகாரணம். அவன்மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது ஏனெனில், நான் பயணம் செய்தது தந்தை பெரியார் (என அந்த காலத்தில் அழைக்கப்பட்ட) சிவப்பு நிற விழுப்புரம் டிப்போ பேருந்தில். அந்த பேருந்தில் தூங்கமுடிவதே பெரிய அதிசயம். அப்படி இருக்கும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அதுவும் இரவு 2 மணிக்கு எழுப்பி இருக்கிறான். நீங்கள் அனுபவித்தால்தான் உணரமுடியும் அதன் வலியை. அந்த மூதாட்டி அவனுக்கு விட்ட சாபங்கள் அனைத்து பலிக்கட்டும். அவன் மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல, பின்னிரவுகளில் வண்டியை உணவகத்திற்கு விடும் அந்த பேருந்து ஓட்டுனரும்தான். எப்படியும் மீண்டும் தூங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே அந்த கனவை ஆராய்ச்சி செய்ய முற்பட்டேன். எனக்கு கலைந்த கனவில் சில பல சந்தேகங்கள் எழுகிறது. கனவில் நடந்து எந்த கால கட்டத்தை சேர்ந்தது? நான் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு போக முற்பட்டேன்? அதே கனவிற்கு மீண்டும் செல்ல வழி இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை தேடி இருக்கலாமே!! ஒருவேளை 2050- நடக்கபோகும் நிகழ்வாக இருக்குமோ? ஒருவேளை சென்னையிலிருந்து – கள்ளக்குறிச்சிக்கு போக முனைதிருப்பேனா?(ஆச.. தோச.. 250 கி.மீ தூரத்துக்கு SSTS கேக்குதா?). சரி ஒலியின் வேகத்தில் ரயில் பயணம் சாத்தியம் தானா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஒலியின் வேகம் என்றவுடன் சிறுவயது பிளாஷ்பேக் நிழலாடியது. ஏர் ஓட்டி கொண்டிருந்த அப்பா டேய்ய்... முருகேசா... தண்ணி கொண்டா என்று கத்தினார். எனக்கும் அவருக்குமான இடைவெளி சுமார் 100 மீட்டராவது இருக்கும்.  நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி நடக்க ஆரப்பிதேன். அவர் கலப்பையில் மண்ணை களைகொத்தியால் தட்டி கொண்டிருந்தார், டக் .. டக் என்ற சத்தம் கேட்டது. அவருடைய செய்கைக்கும் கேட்கும் சத்தத்திற்கும் சிறிய நேர இடைவெளி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது ஒளிக்கும் ஒலிக்குமான வேக வேறுபாட்டினால் தான் என்பதை பலவருடங்கள் கழித்து அறிவியல் பாடத்தில் தெரிந்துகொண்டேன்.

ஒளியின் வேகம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த அண்டவெளியும் கோள்களும் தான். ஏனென்றால் கோள்களுக்கு இடைபட்ட தூரத்தை ஒளியாண்டுகள் என்ற அலகினால் கணக்கிடுகின்றனர். இந்த நாசமா போன நாசா போன வாரம் கூட பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பூமியை போன்ற ஒரு கோளை கண்டுபிடித்ததுடன் அங்கு உயிர்கள் வாழ வாய்புள்ளது என்கிறது. இதெல்லாம் உண்மையா இல்லை காதில் பூசுத்துகிறார்களா? எனக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது ஏனென்றால் சமீபத்தில் அப்போலோ விண்கலம் நிலாவில் இறங்கிய தடையங்களை தெளிவான தோற்றத்துடன் கூடிய படங்களாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து அப்போலோ விண்கலம் தரையிறங்கிய இடங்களை பாதுகாக்க நிலாவில் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. நாசாவின் இந்த நடவடிக்கைகள், நான்தான் முதலில் நிலவில் கால்வைத்தேன் என்கிற பழய பஞ்சாகத்தை உறுதியாக பிடித்து கொண்டிருபதுப்போலும், மற்ற நாடுகள் யாரும் எங்களை வெரிஃபை பண்ண கூடாது என்பது போலும் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா நீங்க எல்லாம் ஆலமர சைஸ்ல இருக்கிற ஆணியவா புடுங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிங்க? ஆணி சொந்தமா புடுங்க முடியலைனா நாசா புடுங்கி போட்ட ஆணி எல்லாம் சரியான்னு பாத்து சொல்ல வேண்டியதுதான. மனசு கெடந்து தவிக்கிதுல்ல?

எனக்கு கனவு இனிக்கிறது. நிஜம் கசக்கிறது. அய்யா இன்செப்சன் டாக்டரே.. சாரி.. டைரக்டரே.. என்னை எப்பாடுபட்டாவது கனவுலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.




Thursday 18 August, 2011

நாவற்பழ வேட்டை!


சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15,  காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.

“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”

என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10.  எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம்.  தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30  நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10  ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.


களா பழம்

இலந்தை பழம்


சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10  ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.




குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,

மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.

சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>

ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.

தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித  ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.


காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!