Monday 24 October, 2011

தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது?


தமிழகத்தில் இயங்கும் கட்சிகளை பற்றி நினைக்கும்போது எல்லோரையும் போலவே எனக்கும் விளங்காத (விடைதெரியாத) அதே கேள்விதான். தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சி எது? காங்கிரஸா, தேமுதிக வா, மதிமுக வா, பாமக வா? இல்லை இவற்றில் இல்லாத ஏதோ ஒரு கட்சியா? இதற்கான விடை ஒவ்வொரு தேர்தல்களிலும் நிச்சயம் மாறுபடும் என்றே எனக்கு தோன்றுகிறது. இதற்க்கு உதாரணம். சட்டமன்றத்தில் முக்கிய எதிர்கட்சியான தேமுதிக சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தது (தமிழக பத்திரிகைகள் இப்படிதான் கூறின). இதற்க்கு கரணம் என்ன? விஜயகாந்த் குடித்துவிட்டு வந்து பிரச்சாரம் செய்வதா? இல்லை இந்த கட்சிக்கு செல்வாக்கே இவ்வளவுதானா? இது நம் பிரச்சனையில்லை, எனவே தோல்விக்கான காரணத்தை அந்த கட்சி தன் சொந்த செலவில் கண்டுபிடித்து கொள்ளட்டும். திமுக சார்பு பத்திரிகைகள் தனது கட்சியின் தோல்வி குறித்து வருத்தபடாமல், தேமுதிக, காங்கரஸ், பாமக கட்சிகளின் தோல்வியில் இன்பம் அடைகின்றன.
ஒரு தனிப்பட்ட கட்சியின் வாக்கு வங்கி மிகவும் ரகசியமான ஒன்றாகவே இவ்வளவு நாட்களாக இருந்துவந்தது. இதற்கான காரணம் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதுதான். இந்த ரகசியத்தை ஓரளவு கசியவைத்த பெருமை உள்ளாட்சி தேர்தல் 2011 -ஐச்சேரும். இதேபோல் சட்டமன்ற / பாராளுமன்ற பொதுத்தேர்தல் களையும் இந்த கட்சிகள் சந்தித்தால் நன்றாக இருக்கும். இந்த உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைத்தது என்ற விவரங்களை அறிந்துகொள்ள இணையத்தில் உலவும் போது  கீழேயுள்ள புள்ளி விவரங்களை தமிழக தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் காண முடிந்தது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த பல தகவல்களை ஆணையம் அழகாக நெறிப்படுத்தி வெளியிட்டுள்ளது. கிராம ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை கூட காண முடிந்தது. ஆனால் உள்ளாட்சியிலேயே கடை மட்ட பதவியான கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் அளவில் தகவல்கள் இல்லை. அடுத்த தேர்தலுக்குள் ஆணையம் அந்த வசதியையும் கொண்டுவந்துவிடும். தமிழக தேர்தல் ஆணையம் சுட்டி
நன்றி : தமிழக தேர்தல் ஆணையம்
இந்த புள்ளி விவரங்களிலிருந்து நாம் அறிவது,

1.       49.15%  இடங்களில் அஇஅதிமுக வெற்றிபெற்றுள்ளது. (வெறும் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது, அதாவது சென்னை மாநகராட்சி மேயரும், சின்னசேலம் பேரூராட்சியின் வார்டு உறுப்பினரும் சமப்படுத்தப்பட்டுள்ளனர்).

2.       20.20% இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

3.       16.52% இடங்களில் சுயேட்சைகள் வெற்றிபெற்றுள்ளனர்.

4.        4.26%  இடங்களில் தேமுதிக வெற்றிபெற்றுள்ளது.

5.       3.69% இடங்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.

6.       மீதமுள்ள 6.57%  இடங்களில் மற்ற 25+ கட்சிகள் வெற்றிபெற்றுள்ளது.

7.       தமிழகத்தில் இத்தனை அரசியல் கட்சிகள் இயங்கிகொண்டிருகின்றன.

8.       இதில் மற்றவை(others) என்று விசிக வுக்கு மேலே உள்ளதை கவனிக்கவும். தேர்தல் ஆணையமே குழம்பிப்போய் இந்த கட்சிகளின் பெயரை வெளியிட முடியாமல் மற்றவை என்ற ஒரே வகையில் வெளியிட்டுள்ளது.

9.       இருபதாயிரத்து சொச்ச இடங்களில் ஒன்றைக்கூட வெல்லமுடியாமல் 12 கட்சிகள் உள்ளன. இவையெல்லாம் வட நாட்டு கட்சிகளா? வடநாட்டு கட்சிகளாக இருந்தால் எதற்கு தமிழ்நாட்டு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவேண்டும்? ஒன்றும் புரியவில்லை.

10.    தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். மூன்றாவது பெரிய கட்சி, அப்படியொன்றே இல்லை என்றுதான் இந்த புள்ளி விவரம் சொல்கிறது.

11.    அஇஅதிமுக மற்றும் திமுக தவிர மற்ற அணைத்து கட்சிகள் வென்ற மொத்த இடங்கள் 2840 ஆனால் சுயேட்சைகள் வென்ற இடங்கள் 3326.

12.    ஆக மூன்றாவது சக்தி அல்லது மாற்று சக்தி எனப்படுவது சுயேட்சைகள். எனவே மாற்றம் விரும்பும் பதிவர்கள் அனைவரும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சைகளாக களம் இறங்குங்கள். குடிமகனின் ஆதரவு என்றும் உங்களுக்கே.

மனதில் இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும்!! அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Thursday 13 October, 2011

மரணம் [ சிறுகதை முயற்சி ]




நிசப்தமான காலை பொழுது. ரமேஷ் கண்களை தேய்த்தவாறு தலையணைக்கு அருகில் இருந்த கைபேசியில் மணி பார்க்கிறான். கைபேசித்திரை  7.05 என காட்டுகிறது. படுக்கையிலிருந்து எழுகிறான். சோம்பல் முறித்து முகம் கழுவுகிறான். படுக்கையை மடித்து வைக்கலாம் என்று கலைந்து கிடந்த படுக்கையை நோக்கி நடக்கிறான். சுவற்றுக்கு கிழே  ஒரு பல்லி இறந்து கிடப்பதை கவனிக்கிறான். ஆம் நேற்றிரவு ரமேஷ் சுவற்றில் பார்த்த அதே பல்லிதான். உடலில் காயங்கள் ஏதுமில்லை ஆனாலும் இறந்து கிடந்தது.  

பெரும்பாலான தமிழக இளைஞர்களைப் போலத்தான் ரமேஷும். சொந்தபந்தங்கள் எல்லாம் ஊரில் இருக்கையில், தான் படித்த படிப்புக்கேற்ற ஒரு நல்ல வேலையை சென்னையில் தேடிக்கொண்டான். தினமும் குறைந்தது பத்துமணி நேரமாவது கணினியில் வேலை. சில நாட்கள் இந்த பத்துமணி நேரம் போவதே தெரியாது என்கிற அளவுக்கு அவனுக்கு பிடித்தமான மற்றும் ஆர்வமான வேலை இருக்கும். சில நாட்களில் நேரத்தை கடத்த வேண்டி இருக்கும். வேலை, சாப்பாடு மற்றும் உறக்கம் இவைகள் தான் ரமேஷின் ஒருநாள்.

பல்லி. முதுமை அடைந்திருந்தது. சிலநாட்கள் நல்ல உணவு. பலநாட்கள் பட்டினி.  என்று வாழ்கையில் பல கஷ்டங்களை சந்தித்த பல்லி. ஏன் தான் பல்லியாக பிறந்தோமோ? என்று மனிதர்களை போலவே இதுவும் சலித்துக்கொள்வதுண்டு. பிறகு இது தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை உணர்ந்து அடுத்த வேளை உணவுக்கான வழியைத் தேடும். கடந்த சில நாட்களாகவே இரையில்லாமல் மிகுந்த பசியில் இருந்தது. ஆனாலும் ஓயாமல் இரையை தேடிக்கொண்டிருந்தது. ஒரு இரை சற்று தொலைவில் இருப்பதை கண்டுகொண்டது. தனது அனுபவத்தை பயன்படுத்தி எப்படியாவது பிடித்துவிடுவது என்ற எண்ணத்தில் இருந்தது.

ரமேஷ் தனது அன்றைய வேலைகளை முடித்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தான். கடைசி நேரத்தில் ஒரு வேலையை கொடுத்து முடிக்கசொல்லியதால் தனது மேனேஜர் மீது பயங்கர கடுப்பில் இருந்தான். அறை நண்பன் தூங்கிகொண்டிருந்தான். கை, கால்களை கழுவிவிட்டு நேரே படுக்கைக்கு சென்றான். வேலை வழக்கத்தை விட சற்று அதிகமென்பதால் உடல் அசதி இருந்தது. படுத்தவன் விளக்கு அணைக்க மறந்ததை உணர்ந்து எழுந்தான். அப்பொழுதுதான் அந்த பல்லி பூச்சியை நோக்கி மெதுவாக நகர்வதை பார்த்தான். அவன் ஏனோ அந்த பல்லியை மேனேஜர் போலவும், பூச்சி தம்மை போலவும் பாவித்து. ‘நீங்கள் எல்லாம் உங்களைவிட எளியவர்களிடம் தான் உங்கள் பலத்தை காட்டுகிறீர்கள், உங்களுக்கு சமமானவர்களிடமோ அல்லது உங்களைவிட பலசாலிகளிடமோ இல்லை’ என்று பொருமிக்கொண்டே ஒரு குச்சியை எடுத்து பல்லிக்கும் பூச்சிக்கும் இடையில் தட்டினான். பூச்சி சுதாகரித்துக்கொண்டு ஓடிவிட்டது. பல்லி ஏமாந்தது. பூச்சியை காப்பாற்றி விட்டோம் என்று ரமேஷுக்கு ஒருவித சந்தோஷம். விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் சாய்த்தான்.