சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15, காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.
“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”
என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10. எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம். தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.
நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30 நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10 ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.
களா பழம்
இலந்தை பழம்
சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10 ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.
குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.
தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.
சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>
ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.
மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.
தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.
காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!