Friday 23 September, 2011

தந்தை பெரியாரை மதத் தலைவராக்க முயற்சியா?


நான் சமீபத்தில் எனது நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தேன். அவனுடைய தந்தை ஒரு தீவிர தி.க. அதனால் அந்த திருமணம் சுயமரியாதை திருமணம் என்ற பெயரில் நடைபெற்றது. பேச்சாளர்கள் அனைவரும் பிராமண எதிர்ப்பு வாசகங்களை மட்டுமே பிரதானமாக பேசினர். பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் தி.க ஒரு சில குறிப்பிட்ட கொள்கைகளை மட்டுமே பரப்பி வருகின்றன. தி.க. வுக்கு ஒருவேளை செலக்ட்டிவ் அம்னீசியாவோ? பிராமண எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு இப்படிபட்ட எதிர்ப்புகளை மட்டுமே பரப்புவதாக தெரிகிறது. சாதிக் கலவரமும் மதக்கலவரமும் மலிந்து கிடக்கும் இந்த காலத்தில் இதெல்லாம் தேவைதானா? தமிழர்களின் பெயருக்கு பின்னால் இருந்த சாதியை ஒழித்த என் தலைவனின் இயக்க தொண்டர்களா நீங்கள்?
இது அரசியல் இயக்கமல்ல சமூக இயக்கம் என மார் தட்டி கொள்ளும் உங்களுக்கு, கிராமத்து தலித் இன்றும் மற்ற சாதியினருக்கு அடிமையாகவே வாழ்கிறான் என தெரியாதா? அவனுக்கும் மற்றவனுக்குமான இடைவெளியை குறைப்பதற்கு முயற்சி செய்யலாமே?  அதைவிடுத்து திருமண நிகழ்வை ஒரு கொள்கை பரப்பு கூட்டமாக கருதி, சொற்பொழிவாற்றுவது, துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது இவையெல்லாம், கல்விக்கூடங்களை கொண்டு கிருத்தவத்தை பரப்பும் செயலுக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல. மதமே வேண்டாம் என்றுரைத்த பெரியாரை, பெரியாரிசம் என்ற ஒரு மதத்திற்கு தலைவராக ஆக்கிவிடுவார்களோ என்ற ஐயம் எழுந்துவிட்டது.
பெரியார், நான் சொல்வதை அப்படியே ஏற்றுகொள்ளதே (கேளாதே) சுயமாக சிந்திக்க கற்றுக்கொள் என்றார். பெரியாரின் முக்கிய கொள்கையான பகுத்தறிவை நீங்கள் பரப்பவில்லை. பிராமண எதிர்ப்பையும், இந்து எதிர்ப்பையும் பரப்பும் நீங்கள், சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உண்டாக்கும் கயவர்களுக்கு எவ்விதத்திலும் குறைவானவர்கள் அல்லர். அந்தணர்களின் அதிகாரம் அனைத்து துறைகளிலும் கொடிகட்டி பறந்த அந்த காலகட்டத்தில் பெரியார் நடத்திய அந்தண எதிர்ப்பு பிரச்சாரங்களில் ஒருவித நியாயம் இருந்தது. எவ்விதத்திலும் பொருந்தாத இந்தகாலத்திலும் அதையே தூக்கிகொண்டு திரிவது பெரியார் தொண்டர்களுக்கு அழகல்ல. பெரியாரின் கொள்கை பரப்பு என நீங்கள் செய்யும் செய்கைகள் மூலம் மக்களுக்கு அவரின் மீதான மதிப்பு, மரியாதை குறைய வாய்ப்புள்ளது. உண்மை தொண்டன் இதைச் செய்வானா? நிச்சயம் மாட்டன்.


சமூக இயக்கமாக நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் நிறையவே இருக்கிறது. அணு மின் நிலையங்கள் வேண்டாம் என போராடலாம். தமிழக நதிகளை இணைக்க கோரி போராடலாம். உள்ளூர் எரி, குளங்களை சுத்தம் செய்யலாம். இது போன்றவற்றை செய்யும்போது நீங்கள் பெரியார் தொண்டர்கள் என பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இல்லையென்றால் கடவுள் நேரில் வந்தாலும் பயனில்லை – விவேகானந்தர்.

உன்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் கடவுள் தேவையில்லை – தந்தை பெரியார்.
ஒரே கருத்தை தான் இரு துருவங்களும் வலியுறுத்துகின்றன.

Sunday 18 September, 2011

பயணம் – இனிப்பும் கசப்பும்!


அன்று அந்த அதிவேக ரயிலில் பயணம் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தேன். ஆம் சவுண்ட் ஸ்பீட் ட்ரெயின் சர்வீஸ்(SSTS) என அழைக்கப்படும் ரயில். அதாவது மணிக்கு 1200 கி.மீ என்பது இந்த ரயிலின் உச்சபட்ச வேகம். குறைந்தது மணிக்கு 1000 கி.மீ கியாரண்டி என்கிறார்கள். இது ஒலியின் வேகத்தை விட சற்றே குறைவானாலும் இந்த ரயிலை அப்படிதான் அழைக்கிறார்கள். சில வாரங்களுக்கு முன்புதான் இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பத்திரிகைகள், இந்தியாவில் ஒலியின் வேகத்தில் பயணிகள் ரயில் என கூவின. முன் பதிவு செய்யப்பட்ட பயனசீட்டுடன் ஆட்டோவில் ஏறி அமர்தேன். எஸ்.எஸ்.டி.எஸ் ஸ்டேஷன் போகணும் என்றேன். ஆட்டோ முடுக்கப்பட்டது. சிறிது நேர ஆட்டோ பயணத்தில் ஸ்டேஷனை அடைந்தேன்.


ஒரேயொரு பிளாட்பார்ம் தான் இருந்தது. அதனால் நான் செல்ல வேண்டிய ரயிலை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. மொத்தம் 7 பெட்டிகள் அதில் 5 பயணிகளுக்கு. முதல் பெட்டி செலுத்துனர் கட்டுப்பாட்டு அறை. கடைசி பெட்டி பயணிகளுக்கான சேவை மையப்பெட்டி. உள்ளே நுழைந்ததும் இது இரயிலா இல்லை விமானமா என்ற கேள்வி உதித்தது. காரணம் ரயிலின் உள் கட்டமைப்புகள் தான். எஸ்.எஸ் இரண்டில் 45ஆவது இருக்கை என்னுடையது, அதிர்ஷ்டவசமாக அது ஜன்னல் ஓர இருக்கை. கண்ணாடி ஜன்னல்கள் தான். ஆனால் சற்று தொலைவில்லுள்ள பொருட்களை மட்டுமே கானமுடியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிவேகத்தில் அருகிலுள்ள பொருட்களை பார்க்கும்போது மயக்கம் வரக்கூடும் என்பதால் இந்த ஏற்பாடு. சற்று நேரத்தில் சீட் பெல்ட் அணிய சொல்லி ஒலிபெருக்கி கத்தியது. சேவையாளர் ஒருவர் வந்து அனைவரும் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா என்று பார்த்து சென்றார்.

சிறிது நேரத்தில் ரயில் முடுக்கப்பட்டது, தரையில் முதல்முறையாக அதிவேகத்தில் செல்ல போகிறேன் என்பதால் ஒருவித பயம் கலந்த குஷியில் இருந்தேன். திடீரென டம், டம் என்ற சத்தம் காதை பிளந்தது, தடம் புரண்டுவிட்டதோ என்ற பயம், விழித்துக்கொண்டேன். அட ச்சீ.. அல்ப்ப கனவு. நான் எங்கு இருக்கிறேன்? டம், டம் என்ற சத்தம் நின்றுகொண்டிருந்த பேருந்திலிருந்து வந்தது. டீ.. காப்பி.. சப்ட்ரவங்க சாப்பிடலாம் என்றான், கையில் உள்ள தடியையும், பேருந்தில் உள்ள தகரத்தையும் வைத்து ஒலி எழுப்பிகொண்டிருந்த ஒரு வீனாப்போனவன். ஆம் அந்த பேருந்தில் தான் அமர்திருக்கிறேன். நான் நாளை நடக்க இருக்கும் என் பள்ளிக்கால நண்பனின் திருமணத்திற்காக என் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருக்கிறேன். கைபேசியை எடுத்து மணி பார்த்தேன் அதிகாலை இரண்டு மணி. அந்த தடியடியன் மீது கோபம் பன்மடங்கானது. முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மூதாட்டி பல சாபங்களை தடியடியனுக்கு விட்டாள். அனைவரையும் எழுப்பிவிட்டு அந்த தடியடியன் வேறொரு பேருந்தை நோக்கி நடந்தான். 

பேருந்திலிருந்து இறங்கிவிட்டேன். அந்த ஹோட்டலை பார்த்தவுடன். விழுப்புரதிற்கு அருகில் இருக்கிறேன் என்பதை உறுதி செய்துகொண்டேன். அடிவயிறு முட்டியது. சாலையோரத்தில் கழிக்கலாம் என அந்தபக்கம் சென்றேன், இன்னொருவன் தடியை வைத்துக்கொண்டு இங்கல்லாம் போககூடாது. உள்ள இருக்கிற டாய்லெட்ல தான் போகணும் என்றான். வேறுவழியின்றி அந்த கமகமக்கும் கழிவறைக்கு சென்றேன். ஒன்னுனா மூனு ருவா, ரெண்டுனா அஞ்சி ருவா என்றான். மூன்று ரூபாய் கொடுத்து சென்றுவந்தேன். மூன்று ரூபாய் கொடுப்பது ஒரு பெரிய விஷயம் அல்ல இடத்தை சுத்தமாக பராமரித்து வந்தால். இந்த சாலையோர ஹோட்டல்களை பற்றி முன்பே எனக்கு தெரியும். இந்த வழித்தடம் எனக்கொன்றும் புதிதல்ல. இங்குள்ள பொருட்களை அதிகபட்ச விலையில்(M.R.P)  150%-200% கொடுத்துதான் வாங்கமுடியும். ஈ மொய்க்கும் அந்த இடத்தில் அமர்ந்து சாப்பிட கிட்டத்தட்ட சரவணபவன் ரேஞ்சிக்கு பில் கட்ட வேண்டிவரும். எனவே எதையும் வாங்க முற்படாமல் வண்டியில் ஏறி அமர்ந்தேன். நம்மவர்களை இப்படி பார்க்கும் போது மிகவும் ஏமாற்றமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. சமீபத்தில் நிகழ்ந்த ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பு நிகழ்ந்தபோது  ஜப்பானியர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்று நாம் அனைவரும் இணையத்தில் படித்திருப்போம். இக்கட்டான சூழ்நிலையில் ஜப்பானியர்கள் நடந்துகொண்ட விதத்தினை அழகாக தொகுத்து புதிய தலைமுறை வெளியிட்டிருந்தது. அதனை சுட்டு இங்கு இணைத்துள்ளேன். அதனை படித்தால் நெகிழ்ச்சி உணரப்படுவது நிச்சயம். நம்மவர்களிடம் அடிப்படையிலேயே ஏதோ தவறு இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.
நன்றி: புதிய தலைமுறை

படத்தில் கிளிக் செய்தால் பெரியதாக பார்க்கலாம்.

பல்வேறு குழுக்கள் கறுப்புப்பணத்தை மீட்டுவர குரல்கொடுகின்றன. ஆனால் எந்த ஒரு குழுவும் கறுப்புப்பணம் உருவாகாமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று சொல்வதாக எனக்கு தெரியவில்லை. மேலே குறிப்பிட்ட ஹோட்டலை போல சிறிய அளவில் ஆனால் மிகப்பெரும் எண்ணிக்கையில் கறுப்புப்பணம் உற்பத்திசெய்யப்படுகிறது. மிகப்பெரும் எண்ணிக்கையில் குற்றம் நடந்தால் நம்நாட்டில் அது ஏனோ குற்றமாகக் கருதப்படுவதில்லை. அரசு/ சட்டம் என்ன சொல்கிறது? வரி செலுத்துவது குடிமக்களின் கடமை என்கிறது. இந்த காலத்தில் தாமாக முன்வந்து வரி செலுத்துவதை எதிர்பார்க்க முடியாது. அதனால் வரியை ஒழுங்காக வசூலிப்பது அரசின் தலையாய கடமையாக இந்த குடிமகன் நினைக்கிறான். அரசு மாத வருமான காரர்களிடம் எளிதில் வருமான வரியை வசூலித்து விடுகிறது எப்படி? கார்பரேட் கம்பெனிகளிடம், உங்கள் எம்ப்லாய் களின் வருமான வரியை செலுத்தினால் உங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறேன் என்று சொல்லி அதை சாதித்து கொள்கிறது. கார்பரேட் கம்பெனிகள் நம்மிடமிருந்து புடுங்கி அரசிடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிகொள்கிறது. ஊர்ல சொந்த பிஸ்னஸ் செய்றவன் எல்லாம் சந்தோசமா இருக்கான். ஒரேவொரு வேலையை வச்சிக்கிட்டு நான் படுற பாடு இருக்கே! அய்யோ.. ய்யோ.. ய்யோ.

ஆக யாரும் மனமுவந்து வரி செலுதப்போவதில்லை. அரசு தனது வசூலிக்கும் இயந்திரத்தை(அமைப்பு / சட்டம்)  தூசு தட்டி இந்த காலத்திற்கு ஏற்றாற்போல் பழுது பார்க்கவேண்டும் அல்லது தூக்கி எறிந்துவிட்டு புதிய இயந்திரத்தை வடிவமைக்க வேண்டும். இயந்திரத்தை இயகுபவர்களுக்கு உரிமம் வழங்கும்  வழிமுறைகளில்(தேர்தல்) நிறைய மாற்றம் கொண்டுவரவேண்டும். இயந்திரத்தை சரியாக இயக்கவில்லை எனில் உரிமம் உடனடியாக ரத்து செய்யக்கூடிய உரிமையை உரிமம் வழங்கியவர்களுக்கு கிடைத்திட வழிசெய்தல் வேண்டும். நம்மவர்கள், வரி கொடுத்தால் அரசு அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்றும் அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கின்றனர் என்றும் சொல்லி தாங்கள் வரி செலுத்தாததை நியாயப்படுத்துகிறார்கள். ஒரு குடிமகன் தனது கடமையைச் செய்யவில்லையெனில் அவன் அரசை தட்டி கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். காசு வாங்கிக்கொண்டு ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற உறுப்பினரை தேர்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளனும் தனது தொகுதிக்கு நலத்திட்டங்களை கேட்கும் உரிமையை இழக்கிறான் என்பதை உணரவேண்டும். அரசும் குடிமக்களும் மாறிமாறி குற்றம் சுமத்துவதை விடுத்து ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்யவேண்டும்.

பயணம் தடம்புரண்டு எங்கெங்கோ சென்றுகொண்டிருக்கிறது. சரிவிடுங்கள் புலம்பல்கள் இப்படிதான் இருக்கும். இது எல்லாத்துக்கும் அந்த தடியடியன் தான் மூலகாரணம். அவன்மீது கோபம் பற்றிக்கொண்டு வந்தது ஏனெனில், நான் பயணம் செய்தது தந்தை பெரியார் (என அந்த காலத்தில் அழைக்கப்பட்ட) சிவப்பு நிற விழுப்புரம் டிப்போ பேருந்தில். அந்த பேருந்தில் தூங்கமுடிவதே பெரிய அதிசயம். அப்படி இருக்கும்போது நான் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது அதுவும் இரவு 2 மணிக்கு எழுப்பி இருக்கிறான். நீங்கள் அனுபவித்தால்தான் உணரமுடியும் அதன் வலியை. அந்த மூதாட்டி அவனுக்கு விட்ட சாபங்கள் அனைத்து பலிக்கட்டும். அவன் மட்டுமே முழுமுதற் காரணம் அல்ல, பின்னிரவுகளில் வண்டியை உணவகத்திற்கு விடும் அந்த பேருந்து ஓட்டுனரும்தான். எப்படியும் மீண்டும் தூங்குவது அவ்வளவு சுலபமில்லை. எனவே அந்த கனவை ஆராய்ச்சி செய்ய முற்பட்டேன். எனக்கு கலைந்த கனவில் சில பல சந்தேகங்கள் எழுகிறது. கனவில் நடந்து எந்த கால கட்டத்தை சேர்ந்தது? நான் சென்னையிலிருந்து எந்த ஊருக்கு போக முற்பட்டேன்? அதே கனவிற்கு மீண்டும் செல்ல வழி இருந்தால் இந்த கேள்விகளுக்கு விடை தேடி இருக்கலாமே!! ஒருவேளை 2050- நடக்கபோகும் நிகழ்வாக இருக்குமோ? ஒருவேளை சென்னையிலிருந்து – கள்ளக்குறிச்சிக்கு போக முனைதிருப்பேனா?(ஆச.. தோச.. 250 கி.மீ தூரத்துக்கு SSTS கேக்குதா?). சரி ஒலியின் வேகத்தில் ரயில் பயணம் சாத்தியம் தானா? காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

ஒலியின் வேகம் என்றவுடன் சிறுவயது பிளாஷ்பேக் நிழலாடியது. ஏர் ஓட்டி கொண்டிருந்த அப்பா டேய்ய்... முருகேசா... தண்ணி கொண்டா என்று கத்தினார். எனக்கும் அவருக்குமான இடைவெளி சுமார் 100 மீட்டராவது இருக்கும்.  நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அப்பாவை நோக்கி நடக்க ஆரப்பிதேன். அவர் கலப்பையில் மண்ணை களைகொத்தியால் தட்டி கொண்டிருந்தார், டக் .. டக் என்ற சத்தம் கேட்டது. அவருடைய செய்கைக்கும் கேட்கும் சத்தத்திற்கும் சிறிய நேர இடைவெளி இருப்பதை என்னால் உணரமுடிந்தது. இது ஒளிக்கும் ஒலிக்குமான வேக வேறுபாட்டினால் தான் என்பதை பலவருடங்கள் கழித்து அறிவியல் பாடத்தில் தெரிந்துகொண்டேன்.

ஒளியின் வேகம் என்றால் எனக்கு முதலில் நினைவுக்கு வருவது இந்த அண்டவெளியும் கோள்களும் தான். ஏனென்றால் கோள்களுக்கு இடைபட்ட தூரத்தை ஒளியாண்டுகள் என்ற அலகினால் கணக்கிடுகின்றனர். இந்த நாசமா போன நாசா போன வாரம் கூட பூமியிலிருந்து 50 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள பூமியை போன்ற ஒரு கோளை கண்டுபிடித்ததுடன் அங்கு உயிர்கள் வாழ வாய்புள்ளது என்கிறது. இதெல்லாம் உண்மையா இல்லை காதில் பூசுத்துகிறார்களா? எனக்கு நாசா மீதான நம்பிக்கை குறைந்துகொண்டே வருகிறது ஏனென்றால் சமீபத்தில் அப்போலோ விண்கலம் நிலாவில் இறங்கிய தடையங்களை தெளிவான தோற்றத்துடன் கூடிய படங்களாக வெளியிட்டது. அதனை தொடர்ந்து அப்போலோ விண்கலம் தரையிறங்கிய இடங்களை பாதுகாக்க நிலாவில் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க நாசா திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியானது. நாசாவின் இந்த நடவடிக்கைகள், நான்தான் முதலில் நிலவில் கால்வைத்தேன் என்கிற பழய பஞ்சாகத்தை உறுதியாக பிடித்து கொண்டிருபதுப்போலும், மற்ற நாடுகள் யாரும் எங்களை வெரிஃபை பண்ண கூடாது என்பது போலும் இருக்கிறது. ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஜப்பான், சீனா நீங்க எல்லாம் ஆலமர சைஸ்ல இருக்கிற ஆணியவா புடுங்க ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கிங்க? ஆணி சொந்தமா புடுங்க முடியலைனா நாசா புடுங்கி போட்ட ஆணி எல்லாம் சரியான்னு பாத்து சொல்ல வேண்டியதுதான. மனசு கெடந்து தவிக்கிதுல்ல?

எனக்கு கனவு இனிக்கிறது. நிஜம் கசக்கிறது. அய்யா இன்செப்சன் டாக்டரே.. சாரி.. டைரக்டரே.. என்னை எப்பாடுபட்டாவது கனவுலகிற்கு அழைத்துச் செல்லுங்கள்.