Wednesday 3 August, 2011

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கேறும் ஓர் அற்புதம்!




இவ்வாண்டு நடைபெறும் பொறியியல் கலந்தாய்விற்கு இருமுறை செல்ல வாய்ப்பு கிட்டியது, முதல் முறை என் ஊர் மாணவர் ஒருவருக்காகவும். மறுமுறை சொந்தகார மாணவிக்கு. அண்ணா பல்கலைக்கழக வளாகம் - தம்மிடத்தில் குழுமி இருக்கும் வருங்கால பொறியாளர்களை கண்டு பெருமிதமடைகிறது. அங்கிருந்தவர்களை பார்த்தமட்டில் என்னால் இருவகையாக பிரிக்க முடிந்தது.

முதல் வகை – நன்கு படித்த தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும் நகரத்தில் வசிப்பவர்கள். ஒருவரின் கலந்தாய்விற்காக ஒரு முழு குடும்பமே வந்துள்ளது. இந்த மாணவர் அல்லது மாணவியர் கண்களில் எதிர்கால கனவுகள் சிறகடிக்கின்றன. இவர்கள் தங்களின் தேவையை தெளிவாக பலமுறை அலசி ஆராய்ந்து தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தெரிவு ஒன்று, இரண்டு, மூன்று... என்று வரிசைப்படுத்தி, தங்களுக்கான முறை எப்பொழுது வருமென்று காத்திருப்பவர்கள்.

இரண்டாம் வகை – படிக்காத தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும்  கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்கள் தந்தை மற்றும் தனது ஊரில் படித்த ஒருவருடன் வந்துள்ளனர். இவர்களுக்கு எங்கு செல்வது என்ன செய்வது என்று புரியாமல், ஒருவித தயக்கத்துடன் காணப்பட்டனர். மாணவன் அல்லது மாணவியின் கண்களில் ஒருவித மிரட்சியை காணமுடிந்தது. இந்தவகையில் முதல்முறையாக சென்னைக்கு வருபவர்கள்தான் அதிகம். சென்னையின் பிரமாண்டம் இந்த மிரட்சியினை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும் இவர்கள் இங்குள்ளவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்பதாலும் தயக்கம் இவர்களுடன் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தபின், மாணவ மாணவியருடன் வந்தவர்கள் வெளியே அனுப்ப படுவார்கள். பிறகு மாணவ மாணவியர்கள் மேல் தளத்திற்கு சென்று தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டு அரங்கிலிருந்து வெளியேறவேண்டும். இதுதான் நடைமுறை. மகளுடன் வந்த தந்தை ஒருவர் தனது மகளை தனியே அனுப்ப மறுத்து, பணியிலிருந்த கவலருடன் சண்டைபோடுகிறார். காவலரோ அவரை வெளியே அழைத்து வந்து, நடைமுறையை விளக்குகிறார். இருப்பினும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். அரங்கின் வாயிற்படியில் 15 நிமிடங்கள் காத்திருந்து தனது மகளுடன் வெளியே வருகிறார்.


சரி, இந்த இருதரபினர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புற மாணவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருந்தது, ஏதேதோ காரணங்களுக்காக 2001 –ஆம் வருடம் இந்த ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டது. இப்பொழுது இதனை தமிழக அரசு வேறு வடிவில் செயல்படுத்துகிறது. முதல் பட்டதாரி மாணவ -மாணவிகளுக்கு உயர் கல்வி கட்டணத்தில் குறிப்பட்ட தொகையை குறிப்பிட்ட படிப்புகளுக்கு அரசே ஏற்கும். இத்திட்டதைதான், பதிவின் தலைப்பில் வர்ணித்துளேன்.


மேலே பார்த்த அட்டவணை பொறியியல் கல்விக்கான கட்டணச் சலுகை ஆகும். இதேபோல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகை சாதி, வருமானம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதுதான் முக்கியமாக குறிபிடத்தக்கது.

பள்ளி கல்வியில் பல குழப்பங்களுக்கிடைய சிக்கித்தவிக்கும் தமிழக அரசை இந்த திட்டத்திற்காக பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. சீக்கிரமே சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் போன்ற பிரச்சனைகளில் நல்ல முடிவை
எடுக்க வாழ்த்துகிறேன்.

தொட்டதுக்கெல்லாம் துள்ளி குதிக்கும் அரசியல்வாதிகள் எங்கே? இந்த திட்டத்தை பாராட்டி ஒரு அறிக்கை விடலாமே. குறை சொல்வது மட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?

பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், வருமான சான்றை போல் அல்லாமல், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கடைசி வரை உண்மையானதாகவே இருக்கட்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மற்றொன்றையும் கவனிக்க தவறவில்லை, தனியார் பொறியியல் கல்லூரிகள், விரிவுரையாளர்களை ஏவி தங்கள் கல்லூரியில் சேர ஆட்கள் பிடிக்கிறது. கலந்தாய்வு முடியபோகும் தருவாயில், இன்னும் 16 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரப்படாமல் இருப்பதுதான் வேடிக்கை.

கல்லூரிகளின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் கல்லூரி முதலாளிகள்தான். எ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைகிறது என்பதற்காகவே பல கல்லூரிகளை ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு கல்லூரியை எப்பாடுபட்டாவது நல்ல கல்லுரி என்ற பெயரை பெறவைத்துவிட்டு, அதே பெயரில் (மிகச்சிறிய வித்தியாசத்தில்) பல கல்லூரிகளை உருவாகிவிட்டால், லாபம் பன்மடங்காகும் என்ற பேராசைதான். இதனால் மாணவர்களும் எது போலி எது உண்மை என்பதை கண்டறிய சிரமப்பட வேண்டியிருக்கிறது.

பத்து ஆண்டுகளில் முன்பிருந்ததைவிட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது, மாணவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயரவில்லை.

ஆகவே கல்லூரி முதலாளிகளே, தங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தால், ஒன்றை அறிவியல் / கலை கல்லூரியாக மாற்றிவிடுங்கள். இப்பொழுது அதற்குத்தான் நல்ல மவுசு. மேலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் யோசனை கூறுவதற்கு கூட காசு கேட்பார்கள், ஆனால் நான் அப்படி இல்லை. எனது யோசனையை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.

16 comments:

கோவை நேரம் said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

பாசிஸ்ட் said...

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்விக் கட்டண சலுகை 2011 12 கல்வியாண்டிலும் தொடரும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=56452

அடேங்கப்பா... கடந்த ஆட்சியின் ஒரு திட்டம் தொடரும்னு சொன்னதுக்கே அறிக்கை விடணுமா? அதிமுக வட்ட செயலரா நீங்க? :) :) :) :)

குடிமகன் said...

மதிப்பிற்குரிய பாசிஸ்ட் அவர்களே,

எனது முந்தைய பதிவை படித்திருந்தால் என்னை அதிமுக வட்ட செயலாளரா? என்று கேட்டு இருக்க மாட்டீர்கள். திட்டம் சென்ற அரசு வரைந்ததுதான், அதை தொடர்ந்து செயல்படுத்துவது புதிய அரசு தான். நான் இரண்டையும் பார்ப்பது தமிழக அரசு என்கிற அமைப்பாக.

நல்லவேளை கலைஞர் இத்திட்டத்தை உருவாக்கியது நான்தான் என்று எந்த அறிக்கையையும் விடவில்லை.. அப்படி அவர்செய்திருந்தால்.. காழ்ப்பு கொண்ட அம்மா, மக்களே, அடுத்த ஆண்டில் உங்களுக்கு இதைவிட சிறப்பான திட்டத்தை கொடுக்கிறேன் என்று சொல்லி, இந்தாண்டில் நிறுத்தி வைத்திருப்பார்.

நான் கேட்டது, தங்களையும் அரசியல்வாதி யாகக் கூறிக்கொண்டு, சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தவேண்டுமென்று கூறுபவர்களையும், ஈழம் ஈழம்... என்று துடிப்பவர்களையும், உழைப்பாளிகளின் பிரதிநிதி யாக தங்களை கூறிக்கொள்பவர்களையும் தான்.

மீடியாக்களும் இத்திட்டத்தை பாராட்டவில்லையே என்றுதான் எனக்கு வருத்தம்.

மாலதி said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள்

மாலதி said...

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கல்விக் கட்டண சலுகை 2011 12 கல்வியாண்டிலும் தொடரும் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் கூறினார்.//மீடியாக்களும் இத்திட்டத்தை பாராட்டவில்லையே என்றுதான் எனக்கு வருத்தம். //வாழ்த்துக்கள்

குடிமகன் said...

மாலதியின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... மீண்டும் வருக!!

தேசாந்திரி-பழமை விரும்பி said...

நல்ல அலசல் குடிமகன் !
நான் , நீங்க சொன்ன இரண்டு வகையில ரெண்டாவது வகை ! ;)

சுதா SJ said...

அசத்தல் அலசல் பாஸ்
காலத்தின் தேவை உணர்ந்து அலசு உள்ளீர்கள்
சூப்பர்

குடிமகன் said...

தேசாந்திரி-பழமை விரும்பி said...

//நல்ல அலசல் குடிமகன் !
நான் , நீங்க சொன்ன இரண்டு வகையில ரெண்டாவது வகை ! ;) //

தங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி... மீண்டும் வருக

குடிமகன் said...

துஷி யின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!

அம்பாளடியாள் said...

தரமான படைப்புகளை வெளியிட்டுவரும் தங்களுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.நன்றி பகிர்வுக்கு........

குடிமகன் said...

அம்பாளடியாள் - ன் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி... மீண்டும் வருக

காந்தி பனங்கூர் said...

உங்கள் மின்னஞ்சல் முகவரியை
gandhig.chem@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் நண்பா. மற்றும் தொடர்ந்து எதாவ்து பதிவு செய்யுங்கள். நன்றி.

குடிமகன் said...

காந்தியின் வருகைக்கு நன்றி!!

மின்னஞ்சல் முகவரியை அனுப்பிவிட்டேன்..

மாணவன் said...

அன்பின் நண்பருக்கு இனிய வணக்கம்,
உங்களின் வலைத்தளத்தை அன்பு அண்ணன் திரு. வைகை அவர்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளார் நேரம் கிடைக்கும்போது வருகை தரவும் நன்றி!

குடிமகன் said...

@ மாணவன் – தகவலுக்கு நன்றி நண்பரே!

இதோ சென்று பார்கிறேன்..

Post a Comment

மனசுல பட்டத சொல்லிடுங்க!