Thursday, 18 August 2011

நாவற்பழ வேட்டை!


சென்றவாரம் சுதந்திர தினத்தின் கருணையால் மூன்று நாட்கள் விடுப்பு கிடைத்தது, நான் ஊருக்கு பறந்துவிட்டேன். இரண்டு நாட்கள் உருண்டோடிவிட்டன. அன்று ஆகஸ்ட் 15,  காலையில் வழக்கம்போல் ஏழு மணிக்கு எழுந்துவிட்டேன். நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்துக்கள் சொல்லவேண்டுமே, வெறுமனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்று அனைவருக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவிடலாமா? இல்லை இல்லை, குறுஞ்செய்தி அனுபுவதென்று முடிவான பிறகு சிக்கனமெதற்க்கு ஒரு கருத்தையும் சேர்த்தே சொல்லிவிடலாமே.

“சுதந்திர தின வாழ்த்துக்கள்!! கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும். நாம் இந்த சுதந்திர காற்றை சுவாசிக்க காரணமாக இருந்த நமது முப்பாட்டனார்களுக்கு நன்றி சொல்லுங்கள். மீண்டும் ஒருமுறை கண்களை மூடி ஆழமாக மூச்சை உள் இழுத்து பின் மெதுவாக விடவும், இம்முறை ஓர் உறுதிமொழி ‘நான் வாழும் இந்த பூமித்தாயின் வளங்களை பயன்படுத்த நேரும் ஒவ்வொரு தருணத்திலும் எனது பேரக்குழந்தைகளை நினைவில் கொள்வேன்’. இருக்கும் சுதந்திரத்தை முழுமையாக அனுபவியுங்கள்”

என்ற குறுஞ்செய்தியை (??) கைபேசியில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் அனுப்பிவிட்டு காலை உணவை முடிக்கும்போது மணி 10.  எனது தம்பியும் அவனது சகாக்களும் தீட்டிய ரகசிய திட்டம் எப்படியோ எனது காதில் விழுந்துவிட்டது. அருகிலுள்ள காட்டிற்கு(வனம்) சென்று நாவற்பழம் பறிப்பது அவர்களுடைய திட்டம். நானும் எனது சித்தப்பாவும் படையில் சேர்ந்துகொண்டோம்.  தம்பி தன் சகாக்களுடன் சேர்ந்து மூன்று சைக்கிள்களில் புறபட்டுவிட்டான். சற்று நேரம் கழித்து நானும் சித்தப்பாவும் மோட்டார் பைக்கில் தண்ணீர் பாட்டில்களுடன் கிளம்பினோம். நாம் வனத்தை அடைவதற்குள் உங்களுக்கு இந்த வனத்தை அறிமுகம் செய்கிறேன்.

நான் பிறந்து வளர்ந்த என் கிராமத்து வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் துவங்குகிறது இந்த வனம். நாவற்பழத்தின் சுவையை நினைத்துக்கொண்டே நடந்தால் 30  நிமிடத்தில் வனத்தை அடையலாம். மான், நரி, காட்டுப்பன்றி மற்றும் குரங்கு இவர்கள் தான் இந்த வனத்தில் வாழ்க்கை நடத்துபவர்கள். இது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. எனக்கு தெரிந்து இரண்டு ஓடைகள் உள்ளது, இந்த ஓடைகளின் இருமருங்கிலும் நாவல் மரங்கள் இருக்கும். ஓடையை தவிர வேறெங்கும் நாவல் மரங்களை காணமுடியாது. முட்செடிகளும் (நிறைய வகைகள் பழம் தரக்குடியவை), வேளமரங்களும், புதர்க்களுமாகத்தான் காட்சியளிக்கும் இந்த வனம். 10  ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வனத்துடன் நெருங்கிய நட்புகொண்டிருந்தேன். எனது மேல்நிலைப்பள்ளிக்கு இதன் ஒரு பகுதியை கடந்துதான் செல்லவேண்டும். விறகு சேகரிக்க, ஆடு / மாடு மேய்பதற்கு, களா பழம் பறிக்க, நாவல் பழம் பறிக்க, இலந்தை பழம் பறிக்க, காரப்பழம் பறிக்க என எதோ ஒரு காரணத்திற்காக பெரும்பாலான விடுமுறை நாட்களும் இங்குதான் கழியும்.


களா பழம்

இலந்தை பழம்


சைக்கிளில் சென்றவர்கள் எங்களுக்கு முன்பே வேட்டையை ஆரம்பித்துவிட்டனர். எனது நோக்கம் பொழுதை கழிப்பதாகவே இருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு வனத்தினுள் நடக்க ஆரம்பித்தோம். 10  ஆண்டுகளுக்கு பிறகு பழய சிநேகிதனை பார்கிறேன், மனித ஆக்கிரமிப்புகளின்றி எந்த மாறுதலுக்கும் உட்படாமல் அப்படியே இருக்கிறான். ‘நீ தான் ரொம்பவே மாறிட்ட’ என்று அவன் கேட்பது எனக்கு மட்டும் புரிந்தது. சித்தப்பாவும் தன் பங்கிற்கு மரத்தில் ஏறி நாவல் வேட்டையை துவக்கி இருந்தார். நான் மரத்தின் கீழே கிடக்கும் பழங்களை பொறுக்கினேன். நான் மரத்தில் ஏறக்கூடாது என எச்சரிக்க பட்டிருந்தேன். ‘இல்லைனா மட்டும் ஏறி கிழிச்சிருவிங்கலாக்கும்‘ இது என் மனசாட்சி.




குரங்குகள் கிளைக்கு கிளை தாவி நன்கு பழுத்த பழமாக பறித்து சாப்பிடுகிறது. குரங்குகளுக்கு எப்பொழுதுமே சேட்டைகள் அதிகம். நான் பொறுக்கிய பழங்களை ஒரு சிறிய குவியலாக வைத்திருந்தேன். அந்த பக்கம் வந்த மந்தியொன்று கையில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு மீதியை வாரி தரையில் இரைத்துச்சென்றது. மனிதனுக்கு ஏமாற்றி பிழைக்கும் திறமை இவைகளிடமிருந்துதான் வந்திருக்கவேண்டும்.

தம்பி & கோ சற்று தொலைவிலுள்ள வேறு மரத்தில் பழம் பறித்து கொண்டிருந்தனர். நான் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும்போது, இரண்டு புள்ளி மான்கள் ஓடையில் உள்ள குட்டையில் தண்ணீர் பருகுவதைக் கண்டேன். காட்சி அற்புதம். கையில் கேமரா இல்லாமைக்கு மிகவும் வருத்தப்பட்டேன். சற்று அருகில் சென்று பார்க்கலாம் என்று மெதுவாக இரண்டடி எடுத்து வைத்திருந்தேன். மான்கள் என்னை கவனித்து மிரண்டு ஓடிவிட்டது. மான்களை பார்த்தவுடன் எங்கோ படித்து நினைவுக்கு வந்து சென்றது.
<அடர்ந்த காட்டின் காலைப்பொழுதில்,

மான்: இந்த காட்டிலுள்ள மிக வேகமாக ஓடக்கூடிய சிங்கத்தை விட நான் வேகமாக ஓடவேண்டும்.

சிங்கம்: இந்த காட்டிலுள்ள மிக மெதுவாக ஓடக்கூடிய மானை விட நான் வேகமாக ஓடவேண்டும்.>

ஆனால் இவ்விரண்டு மான்களுக்கும் இந்தகாட்டில் சிங்கங்களை பற்றிய கவலை கிடையாது.

மனிதம் பூமியில் வாழும் ஓர் உயிரினம் என்பதை மறந்து, தமக்காக இந்த பூமி படைக்கப்பட்டது என்கிற சித்தாந்தத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருகிறது. ஆனால் இதன் விளைவாக பாதிப்புக்குள்ளாக போவது மனித சமுதாயம் மட்டுமில்லை, சக உயிரினங்களும்தான். மனிதகுலத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து ஏனைய உயிரினங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராட்டம் செய்தால் எப்படி இருக்கும்? என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. ஹாலிவுட்ல யாரவது படம் எடுத்திருந்தா, படத்தின் பெயரை சொல்லுங்கப்பா.. கண்டிப்பா பாக்கணும். இல்லையெனில் அது நாவலாக இருந்தாலும் சொல்லுங்கள்.

தம்பி & கோ கொண்டு வந்த பைகளை நிரப்பிவிட்டனர். சிறிது நேர ஓய்விற்குப் பின் வீட்டிற்கு கிளம்பினோம். அடுத்தமுறை வரும்பொழுதும் எவ்வித  ஆக்கிரமிற்புமின்றி இருந்தால் நன்றாக இருக்கும்.


காடு வளர்ப்போம்!! புவி வெப்பமயமாவதைத் தள்ளி போடுவோம்!!!

Wednesday, 3 August 2011

ஆர்ப்பாட்டமே இல்லாமல் அரங்கேறும் ஓர் அற்புதம்!




இவ்வாண்டு நடைபெறும் பொறியியல் கலந்தாய்விற்கு இருமுறை செல்ல வாய்ப்பு கிட்டியது, முதல் முறை என் ஊர் மாணவர் ஒருவருக்காகவும். மறுமுறை சொந்தகார மாணவிக்கு. அண்ணா பல்கலைக்கழக வளாகம் - தம்மிடத்தில் குழுமி இருக்கும் வருங்கால பொறியாளர்களை கண்டு பெருமிதமடைகிறது. அங்கிருந்தவர்களை பார்த்தமட்டில் என்னால் இருவகையாக பிரிக்க முடிந்தது.

முதல் வகை – நன்கு படித்த தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும் நகரத்தில் வசிப்பவர்கள். ஒருவரின் கலந்தாய்விற்காக ஒரு முழு குடும்பமே வந்துள்ளது. இந்த மாணவர் அல்லது மாணவியர் கண்களில் எதிர்கால கனவுகள் சிறகடிக்கின்றன. இவர்கள் தங்களின் தேவையை தெளிவாக பலமுறை அலசி ஆராய்ந்து தங்களுக்கான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தெரிவு ஒன்று, இரண்டு, மூன்று... என்று வரிசைப்படுத்தி, தங்களுக்கான முறை எப்பொழுது வருமென்று காத்திருப்பவர்கள்.

இரண்டாம் வகை – படிக்காத தாய் தந்தையை கொண்டிருப்பவர்கள் மற்றும்  கிராமத்தில் வசிப்பவர்கள். இவர்கள் தந்தை மற்றும் தனது ஊரில் படித்த ஒருவருடன் வந்துள்ளனர். இவர்களுக்கு எங்கு செல்வது என்ன செய்வது என்று புரியாமல், ஒருவித தயக்கத்துடன் காணப்பட்டனர். மாணவன் அல்லது மாணவியின் கண்களில் ஒருவித மிரட்சியை காணமுடிந்தது. இந்தவகையில் முதல்முறையாக சென்னைக்கு வருபவர்கள்தான் அதிகம். சென்னையின் பிரமாண்டம் இந்த மிரட்சியினை ஏற்படுத்தி இருக்கலாம். மேலும் இவர்கள் இங்குள்ளவர்களுடன் தங்களை ஒப்பிட்டு பார்பதாலும் தயக்கம் இவர்களுடன் சேர்ந்திருக்கும் என நினைக்கிறேன்.

கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தபின், மாணவ மாணவியருடன் வந்தவர்கள் வெளியே அனுப்ப படுவார்கள். பிறகு மாணவ மாணவியர்கள் மேல் தளத்திற்கு சென்று தங்களுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுக்கொண்டு அரங்கிலிருந்து வெளியேறவேண்டும். இதுதான் நடைமுறை. மகளுடன் வந்த தந்தை ஒருவர் தனது மகளை தனியே அனுப்ப மறுத்து, பணியிலிருந்த கவலருடன் சண்டைபோடுகிறார். காவலரோ அவரை வெளியே அழைத்து வந்து, நடைமுறையை விளக்குகிறார். இருப்பினும் அவர் வெளியேற மறுத்துவிட்டார். அரங்கின் வாயிற்படியில் 15 நிமிடங்கள் காத்திருந்து தனது மகளுடன் வெளியே வருகிறார்.


சரி, இந்த இருதரபினர்களுக்கும் உள்ள வேறுபாட்டைக் களைய அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது? பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கிராமப்புற மாணவர்களுக்கு என தனி இட ஒதுக்கீடு இருந்தது, ஏதேதோ காரணங்களுக்காக 2001 –ஆம் வருடம் இந்த ஒதுக்கீடு முற்றிலும் கைவிடப்பட்டது. இப்பொழுது இதனை தமிழக அரசு வேறு வடிவில் செயல்படுத்துகிறது. முதல் பட்டதாரி மாணவ -மாணவிகளுக்கு உயர் கல்வி கட்டணத்தில் குறிப்பட்ட தொகையை குறிப்பிட்ட படிப்புகளுக்கு அரசே ஏற்கும். இத்திட்டதைதான், பதிவின் தலைப்பில் வர்ணித்துளேன்.


மேலே பார்த்த அட்டவணை பொறியியல் கல்விக்கான கட்டணச் சலுகை ஆகும். இதேபோல் மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் சட்டம் போன்ற படிப்புகளுக்கும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டணத்தில் சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகை சாதி, வருமானம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்பதுதான் முக்கியமாக குறிபிடத்தக்கது.

பள்ளி கல்வியில் பல குழப்பங்களுக்கிடைய சிக்கித்தவிக்கும் தமிழக அரசை இந்த திட்டத்திற்காக பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை. சீக்கிரமே சமச்சீர் கல்வி மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயம் போன்ற பிரச்சனைகளில் நல்ல முடிவை
எடுக்க வாழ்த்துகிறேன்.

தொட்டதுக்கெல்லாம் துள்ளி குதிக்கும் அரசியல்வாதிகள் எங்கே? இந்த திட்டத்தை பாராட்டி ஒரு அறிக்கை விடலாமே. குறை சொல்வது மட்டும்தான் இவர்களுக்கு தெரியுமா?

பொதுமக்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு வேண்டுகோள், வருமான சான்றை போல் அல்லாமல், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் கடைசி வரை உண்மையானதாகவே இருக்கட்டும்.

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த மற்றொன்றையும் கவனிக்க தவறவில்லை, தனியார் பொறியியல் கல்லூரிகள், விரிவுரையாளர்களை ஏவி தங்கள் கல்லூரியில் சேர ஆட்கள் பிடிக்கிறது. கலந்தாய்வு முடியபோகும் தருவாயில், இன்னும் 16 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரப்படாமல் இருப்பதுதான் வேடிக்கை.

கல்லூரிகளின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் கல்லூரி முதலாளிகள்தான். எ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் கிடைகிறது என்பதற்காகவே பல கல்லூரிகளை ஆரம்பித்தது விட்டார்கள். ஒரு கல்லூரியை எப்பாடுபட்டாவது நல்ல கல்லுரி என்ற பெயரை பெறவைத்துவிட்டு, அதே பெயரில் (மிகச்சிறிய வித்தியாசத்தில்) பல கல்லூரிகளை உருவாகிவிட்டால், லாபம் பன்மடங்காகும் என்ற பேராசைதான். இதனால் மாணவர்களும் எது போலி எது உண்மை என்பதை கண்டறிய சிரமப்பட வேண்டியிருக்கிறது.

பத்து ஆண்டுகளில் முன்பிருந்ததைவிட பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை இரு மடங்காகியது, மாணவர்களின் எண்ணிக்கை இந்த அளவிற்கு உயரவில்லை.

ஆகவே கல்லூரி முதலாளிகளே, தங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்தால், ஒன்றை அறிவியல் / கலை கல்லூரியாக மாற்றிவிடுங்கள். இப்பொழுது அதற்குத்தான் நல்ல மவுசு. மேலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலத்தில் யோசனை கூறுவதற்கு கூட காசு கேட்பார்கள், ஆனால் நான் அப்படி இல்லை. எனது யோசனையை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள தங்களுக்கு அனுமதி கொடுக்கிறேன்.

Monday, 20 June 2011

காலாவதியான கல்விமுறை – ஒரு விமர்சனம்

நான் சமீபத்தில் சென்னையிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பேருந்தில் பயணம் செய்தேன். அது ஒரு வெள்ளிக்கிழமையின் இரவு நேரம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில்தான் எத்தனை மனிதர்கள்.அவர்கள் அனைவருக்கும் அப்பொழுதைய குறிக்கோள், எப்படியாவது தாம் செல்ல வேண்டிய பேருந்தில் இருக்கையை பிடித்து விட வேண்டும் என்பதுதான். 10 நிமிடங்கள் காத்திருப்புக்குப் பிறகு எனக்கான பேருந்து வந்து நிற்பதற்கு முன், பாதி இருக்கைகள் நிறைந்து விட்டது. நானும் அடித்து பிடித்து ஒரு இருக்கையை பிடித்து விட்டேன். மனதில் ஒரு நிம்மதி.

பக்கத்துக்கு இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர். “பஸ்ல எடம் புடிக்க ஒரு பெரிய போராட்டத்தயே நடத்தனும் போல” என்றார் அவர்.
எனக்கு ஏனோ எனது மும்பை அனுபவத்தை அவரிடம் சொல்ல தோன்றியது. “பாம்பே-ல எல்லா பஸ் ஸ்டாப்லையும் வரிசையில நின்னுதான் பஸ்-ல ஏறுவாங்க, நம்ம ஊர்லையும் இதேபோல செஞ்சா நல்லா இருக்கும்” என்றேன்.
“நம்ம ஊர்ல அது மாதிரி செஞ்சா, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்புக்கு பக்கத்துல ஒரு போலிஸ் ஸ்டேஷனையும் வைக்கணும், ஏன்னா நம்மாளுங்க நாந்தான் முன்ன வந்தனு, பிரச்சினை பண்ணுவாங்க, எல்லாத்துக்கும் மக்கள் தொகை பெருக்கம்தான் காரணம்” என்றார். அவரது பேச்சில் இருந்த சலிப்பை என்னால் உணரமுடிந்தது.

என்னைப்பற்றிய விசாரிப்பு மற்றும் அவரை பற்றிய அறிமுகம் முடிந்தது.
“தம்பி என்னோட பெரிய பையன் எஞ்சிநீரிங் படிக்கிறான், இவனமாதிரியே சின்னவனையும் படிக்கவச்சிட்டா நல்லா இருக்கும், ஆனா அவன் இப்பதான் பத்தாவது முடிச்சான் ஆனால் மார்க் ரொம்ப கம்மியா எடுத்திருக்கான்” என்றார்.

“ஏன் நீங்க சின்னவனையும் எஞ்சிநீரிங் படிக்கவைகனும்னு சொல்றிங்க?” என்று வினவினேன்.
“நாளைக்கி, உன்னை எஞ்சிநீரிங் படிக்க வச்சிட்டாங்க, என்னை ஒண்ணுக்கும் ஆகாதத படிக்க வச்சிட்டாங்கனு ரெண்டு பேருக்கும் பிரச்சனை வந்துடக்கூடாது பாருங்க” என்றார்.

நல்ல பொறுப்பான அப்பா என்று நினைத்து விட்டு, அவருக்கு சில ஆலோசனைகளை வழங்கினேன்.
என் குடும்பத்தின் அனுபவமும் கிட்டத்தட்ட இதேதான், என் சகோதரன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான் ஆனால் மதிப்பெண்கள் ஒப்பிட்டு அடிப்படையில் மிகக்குறைவு. மேற்குறிப்பிட்ட நபருக்கு ஆலோசனை வழங்கும் போது இருந்த தெளிவு எனது சகோதரனுடைய மேற்படிப்பை திட்டமிடும்போது இல்லவேயில்லை. ஏனென்றால் இன்னும் கொஞ்சம் மதிப்பெண்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. ‘உபதேசம் ஊருக்கு மட்டும் தான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பிரச்சினை என்னுடையதா இருந்தால் அதனை உணர்ச்சிப்பூர்வமாகவும், மற்றவருடையதாக இருந்தால் அதனை அனுபவப்பூர்வமாக அணுகுவதுதான் என்னால் முடிகிறது. பிரச்சினை எவ்வளவு வீரியமனதாக இருந்தாலும் அதனை நிதானமாக அணுகும் பயிற்சியை எனது கல்வியோ அல்லது சுற்றுப்புறமோ எனக்கு கற்றுக்கொடுக்கவில்லை.

பொறியியல் தான் என் சகோதரனுக்கு மேற்படிப்பு திட்டம் என்பது குடும்பத்தினர் அனைவரின் ஒருமித்த முடிவு, நான் டிப்ளமோ படிக்க வைத்து பின் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடலாம் என்றேன். டிப்ளமோ செய்முறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அடிப்படை புரிதலுக்கு வழிவகுக்கும் என்ற கருத்தை முன்வைத்தேன். என் தந்தையோ +1 சேர்க்கலாம் என்று சொல்லி, என்னை சமாதான படுத்திவிட்டு அதை செய்தும் விட்டார். என் தாயும் கிட்டத்தட்ட தந்தையை ஆதரித்தார், 7 ½ சனி இன்னும் மூன்று மாதத்தில் முடிவடைகிறது பிறகு நன்றாக படிப்பான் என்றார். எனக்கு ஏனோ ஒரு திரைப்பட வசனம்(“ஆடி போயி ஆவணி வந்தா என் பையன் டாப்பா வருவான்”) தான் நினைவுக்கு வந்து சென்றது. என்னடா படிக்கபோறது ஒருத்தன், முடிவு பண்றது நீங்களா என்று கோவப்படாதிங்க, என் சகோதரர் மிகவும் விவரமானவர் எந்த முடிவையும் தானாக எடுக்கமாட்டார், நாம ஏதாவது கேட்டா ‘நீங்க என்ன சொல்றிங்களோ அதையே படிக்கிறேன்’ என்பார். இதில் ஒரு உள்குத்து இருக்கிறது. தான் இதை படிக்கிறேன் என்று குறிப்பிட்டு சொல்லிட்டா, ஒருவேளை அதிலும் சொதப்பிவிட்டால், ‘நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை போட்டு தாளித்து விடுவீர்கள் அல்லவா?’ என்ற ஒரு எச்சரிக்கை உணர்வுதான்.
சரி குடும்பக் கதைய இப்படியே விட்டுவிட்டு இக்கால கல்விமுறையை ஓர் அலசல் செய்து பார்ப்போம்.

சமச்சீர்கல்வி – அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம், சமத்துவம் என்ற உன்னதமான தத்துவத்திலிருந்து பிறந்திருக்கிறது. ஆனால் சமத்துவம் வெறும் பாடத்திட்டத்தில் போதுமா? என்ற கேள்வி எழுகிறது. புதிய அரசு இதற்கு முட்டுக்கட்டை போடுவதற்கான முகாந்திரம் சற்று குழப்பமாக இருந்தாலும் புலப்படுகிறது, ஒருவேளை இந்த பாடத்திட்டம் நல்ல பலனை கொடுக்குமாயின், கலைஞர் உருவாக்கிய பாடத்திட்டம் என்பதுபோல் வரலாறு ஆகிவிடும் என்பதுதான் காரணமாக இருக்கமுடியும். நான் இப்படி கூறுவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

1.       ஓரிரு ஆண்டுகள் நிபுணர்களின் குழு ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை, அமல்படுத்த தேவையான குறைந்தப்பட்ச தரம் கூட இல்லை என்பதை ஓரிரு நாட்களில் உறுதிப்படுத்துவது சாத்தியம்தானா?

2.       நீதிமன்றங்கள் கூறுவதை ஒரு பொருட்டாக கருதாமல், மேல்முறையீடு செய்து, இறுதித்தீர்வு எட்டும் வரை மாணவர்களை காக்க வைப்பது நியாயம் தானா?

3.       அரசு கூறுவதைப்போல தரம்தான் காரணம் என்றால், தரத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை எடுக்கலாம் அல்லவா?

4.       2௦௦ கோடி பொருட்செலவில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை அப்புறப்படுத்தி விட்டு, பழய பாடத்திட்டப்படி புதிய புத்தகங்களை அச்சிடுவதேன்? - என்ன ஒரு வில்லத்தனம்?
சரி அரசியலை விடுங்கள், தனியார் பள்ளிகள் தரம் என்ற வார்த்தையை தங்களுக்கு சாதகமாக எவ்வாறு பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம். தனியார் பள்ளிகள் சமச்சீர்கல்வி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என்று அதனை எதிர்க்கின்றன. உண்மையாகவே தரத்தில் அக்கறை கொண்டவர்களாக இருந்தால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமச்சீர்கல்வியை கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது, அப்பொழுதே நீதிமன்றத்தை அணுகி சமச்சீர் பாடத்திட்ட வரைவு மற்றும் தயாரிப்பு குழுக்களில் தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடி, குழுக்களில் இடம் பிடித்து தரத்தை உயர்த்தி இருக்கலாமே? இதற்கெல்லாம் நீங்கள் நீதிமன்றம் போகமாடீர்கள் ஆனால் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் போதாதென்று நீதிமன்றம் போவீர்கள். தனியார் பள்ளிகள் கடந்த ஆண்டிலிருந்தே சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டுவரும் முயற்சிகளில் இறங்கிவிட்டன. மேலும் பெற்றோர்களை அணுகி தங்கள் பிள்ளைகளை சி.பி.எஸ்.இ-ல் சேர்க்கும்படி வலியுறுத்துகின்றன.

தனியார் பள்ளிகள் எதனை தரம் என்று கூறுகின்றன?

1.       9-ஆம் மற்றும்   11 –ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல் 10-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களை இரண்டு ஆண்டுகள் நடத்துவதை தரம் என்கிறார்களா?

2.       மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, குறுக்கு வழிகளில் மனப்பாடம் செய்வதெப்படி என்று பயிற்சி கொடுப்பதை தரம் என்கிறார்களா?

3.       உங்களுடைய அழுத்தம் காரணமாக, ஒரே வகுப்பில் படிக்கும் இரு மாணவர்களில், ஒருவன் மற்றவனிடம் சந்தேகம் கேட்கும்போது, பதில் கூறினால் நம்மைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றுவிடுவானோ என்ற எண்ணத்தில் தெரியாது என்று கூறிவிடுகிறான். இதைத்தான் தரம் என்கிறார்களா?
மக்கள்தொகை பெருக்கம் மற்றும் கல்வி அவசியம் என்ற விழிப்புணர்வு போன்ற காரணங்களால், கல்வித்துறையில் நிறைய வாய்ப்புகள் இருப்பதாக என்றெண்ணி இத்துறைக்கு வந்த வியாபாரிகள் தயவுசெய்து வேறுதொழிலை தேர்ந்தெடுங்கள். மாணவர்களின் கற்றலில், முன்னேற்றத்தில் ஆனந்தம் அடைபவர்களுக்கே இத்துறை சரியாக இருக்கும்.

தொலைக்காட்சி கேபிள் சேவை அரசுடமையக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஏன் பள்ளி கல்வித்துறையை அரசுடமையாக்க முயற்சி மெற்கொள்ள கூடாது?
நமது பாடபுத்தகங்கள் எவ்வாறு உள்ளன என்று பார்க்கலாம்.

தமிழ் -  திராவிடக் கொள்கைகளை வளர்க்க ஒரு ஊடகமாக பயன்படுத்தபடுகிறது. படித்தவர்கள் அனைவரும் பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் நாத்திகர்கள். என்பதுமதிரியான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றுள்ளார்கள். தந்தைப்பெரியாரைப் பற்றி கூறு என்று ஒரு மாணவனிடம் கேட்கும்போது, பிள்ளையார் சிலையை எட்டி உதைத்தவர் என்பது போன்ற பதில்கள் தான் வருகின்றன. தந்தைப்பெரியார் அவர்கள் செய்த சமூகச்சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடங்கள் தயாரிப்பதா? அல்லது அனைத்திற்கும் திராவிடச் சாயம் பூசி தயாரிப்பதா? ஏன் கம்யூனிஸ கொள்கைகள் உன்னதம் இல்லையா? கொள்கைகளை தவிர்த்து  தமிழை வளர்க்க முயற்சிக்கபடவேண்டும். மேலும் எழுதப்பட்ட இலக்கியங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கிராமியக் கலைகள் மற்றும் பண்பாட்டிற்கு கொடுக்கப்படவில்லை. இயல், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றை அதன் இயல்பான வழிகளில் கற்பித்தல் மற்றும் கற்றல் நடைபெற வேண்டும். முக்கியமாக தமிழ் மீதான ஆர்வத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் விதமாக பாடங்கள் தயாரிக்கப்பட வேண்டும். சித்த மருத்துவம் பற்றிய பாடங்களையும் அதிகப்படுத்துதல் வேண்டும்.
ஆங்கிலம் – பாடதிட்டத்தில் குறைகூறும் அளவிற்கு நான் பள்ளிக்காலங்களில் ஆங்கிலத்தை படித்திருக்கவில்லை. பனிரெண்டாம் வகுப்பு முடித்தபிறக்கும், ஆங்கிலத்தில் நான்கு வாக்கியங்கள் சொந்தமாக எழுத தெரியாது. இது வந்தால் இதைபோடனும் என்ற அளவில்தான் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. எழுதுதல், படித்தல், கருத்துக்களை தயக்கமின்றி கூறல் போன்ற திறன்களை வளர்க்க ஏதுவாக பயிற்றுவிக்கும் முறைகளை மாற்ற வேண்டும். இதில் தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதாக நான் கருதுகிறேன்.

கணிதம் – பாடதிட்டத்தில் நிறையவே கற்பிக்கப்படுகின்றன, ஆனால் அவற்றின் நடைமுறை பயன்பாடுகள் குறித்து கற்பிக்கப்படுவதில்லை. ஒரு கணித (வடிவியல்) முறையின் பயன்பாடுகளை அறியாமல், கணக்கை தீர்க்கும் முறையை மட்டும் அறிந்திருப்பது அந்த கணித முறைப்பற்றி எதுவுமே அறியாமல் இருப்பதற்கு சமம். ஒரு கணக்கை பல கணித முறையில் தீர்க்க முடியும் என்பதால், மாணவர்கள் அவற்றை ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கு பாடங்கள் தெளிவாக இருக்கவேண்டும்.
அறிவியல் – பாடதிட்டத்தில் அறிவியல் தத்துவங்கள் நிறையவே கூறப்பட்டுள்ளது. அனைத்து அடிப்படை விதிகளையும் எளிய செயல்முறை விளக்கங்களுடன் நிரூபிப்பது மற்றும் அவற்றின் நடைமுறை பயன்பாடுகளை விவரிப்பது என்ற வகையில் பாடத்திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

சமூக அறிவியல் – மிகவும் பிற்படுத்தப்பட்ட பாடம் எனச்சொல்வது மிகையாகாது. அந்த அளவிற்கு இதன் முக்கியத்துவம் மங்கிவிட்டது. இதன் உட்பிரிவுகளின் விமர்சனத்தை கீழே காண்போம்.
வரலாறு – ஆண்டுகள், நிகழ்வுகள் மற்றும் பெயர்களை கொண்ட ஒரு தகவல் புத்தகமாகவே வடிவமைகபட்டுள்ளது. அரசர்களின் ஆட்சிமுறை, ஆளுமைத்திறன் உட்பட அனைத்து தனித்திறமைகளும் விவரிக்கப்பட்டு விவாதிக்கப்படுதல் வேண்டும். நிகழ்வுகளில் உள்ள நன்மை- தீமைகளை விவரிக்கப்பட்ட பாடங்களை உருவாக்க வேண்டும்.

புவியியல் – இடங்களின் பெயர்களை வரைபடங்களில் குறிப்பதோடு நில்லாமல். அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கைமுறை, தொழில் மற்றும் ஆட்சிமுறை போன்றவற்றையும் விவரிக்கப்பட வேண்டும். இதன்மூலமாக மாணவர்களுக்கு இந்திய மற்றும் உலக அளவிலான மக்களை பற்றிய அறிவு கிடைக்கும்.
குடிமையியல் – வெறும் இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள் பற்றிய குறிப்பேடாக அல்லாமல் அவற்றின் உன்னத நோக்கங்களையும், இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் கடமைகளையும் விவரிக்கும் படமாக இருக்க வேண்டும்.

மேலே குறிப்பட்ட அனைத்து பாடங்களும் எளிமையான முறையில் அனைத்து தரப்பு மாணவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும். நிறைய பாடங்களை திணிக்காமல் குறைந்த பாடங்களை தெளிவாக தரும் நோக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வகுப்பறை தொழிநுட்ப உதவியுடன் மேம்படுத்தபடவேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும். தேர்வு மற்றும் மதிப்பீடு முறைகளில் நிச்சயம் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும்.

மாணவர்களின் தனித்திறன்களை கண்டறியவும், அவற்றை மேம்படுத்தவும். மாணவர்களுக்கு நற்பண்புகளை புகட்டவும் ‘வாழ்க்கை கல்வி’ என்ற பெயரில் புதிய முழுநேர பாடத்திட்டத்தை உருவாக்கவேண்டும். இதனை முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மற்ற படங்களுக்கு இணையாக சரிவிகிதத்தில் இடம்பெறச்செய்ய வேண்டும். இதில் கிழ்வருவனவற்றை இணைக்க வேண்டும்.

1.       கலை - நடனம், இசை, ஓவியம் போன்ற கலைகளை பயிற்சியுடன் கூடிய பாடமாக வடிவமைக்கபட வேண்டும்.

2.       விளையாட்டு – பயிற்சியுடன் கூடிய விளையாட்டு பாடம் வடிவமைக்கபட வேண்டும்.

3.       மனவளம் – யோகா போன்ற பயிற்சிகளையும், வேதாத்திரி மகரிஷி போன்றவர்கள் உருவாகிய உடற்பயிற்சிகளையும் பயிற்றுவிக்க வேண்டும்.

4.       நீதிபோதனை–போதனைகள் மூலம் கசாப் போன்ற எதிர்மறையானவர்களை உருவக்கபடுவது சாத்தியமாகும் போது. நாம் சிறந்த, நேர்மறையான வருங்கால குடிமக்களை உருவாக்க நீதிபோதனை போன்றவற்றை பயன்படுத்தலாமே?

5.       பிற மனிதர்களுடன் பழகுதல், குறிப்பாக ஆண்- பெண் வேறுபாடின்றி பழகுதல், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் திறன் போன்றவற்றை மேம்படுத்த பயிற்சிகள்.
இயற்கையால் படைக்கப்பட்ட மற்றும் மனிதனால் படைக்கப்பட்ட அனைத்திற்கும் காலாவதி என்ற ஒன்று உள்ளது. என்றோ படைக்கப்பட்ட கல்விமுறையை மட்டும் மாற்றமேதும் செய்யாமல் அப்படியே பயன்படுதி வருவது எந்தவிதத்தில் சரி? கல்விமுறை மட்டுமல்ல, அனைத்து சட்டங்கள் மற்றும் அமைப்புகளை உருவாக்கும் பொழுதே அதற்கான காலாவதி நாள் குறிக்கப்பட வேண்டும். இதன்மூலம் அடுத்த தலைமுறைக்கு அவர்களுக்கேற்ற சட்ட திட்டங்களை உருவாக்கிகொள்ள வாய்ப்பை வழங்கலாம். மேலும் இதன்மூலமாக ஒரு சட்டம் அல்லது ஒரு அமைப்பின் வீரியம் குறைக்கபடுவதை தடுக்கலாம்.

ஊழல் மற்றும் கருப்புபணம் போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் முன்னுரிமை பள்ளிக்கல்வி சீர்திருத்தத்திற்கு கொடுக்கபடாமல் இருப்பது வருத்தமளிகிறது. கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவந்துவிட்டால், மற்ற அனைத்து துறைகளிலும் மாற்றம் தானாக நிகழும், ஆனால் அதற்க்கு கொஞ்சகாலம் பிடிக்கும் அவ்வளவுதான்.

3 இடியட்ஸ் படத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள், போராட தயாராகுங்கள்.